தஞ்சாவூர், ஒரத்தநாடு ஆகிய இடங்களில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். தஞ்சாவூர் கீழவாசல், காமராஜர் சிலை அருகே நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி பேசியதாவது, “பல ஊர்களில் பிரச்சாரத்தை முடித்து விட்டு எங்க வந்து சேரணுமோ அங்கு வந்திருக்கேன்.
நேரம் ஆகிவிட்டது எல்லோரும் ஐபிஎல் மேட்ச் பார்க்க போயிருப்பீர்கள் கூட்டம் இருக்காது என நினைத்தேன். ஆனால் என் எண்ணத்தை பொய்யாக்கி விட்டீர்கள். உங்களை பார்த்ததும் எனக்கு பூஸ்ட் குடித்தமாதிரி இருக்கு. கலைஞரின் மூத்த பிள்ளை, செல்லப்பிள்ளை முரசொலி. அந்த பெயர் கொண்டவருக்கு வாக்கு கேட்டு உங்களிடத்தி வந்திருக்கேன். உதயசூரியனும், முரசொலியும் ஒன்று சேர்ந்துள்ளது. முரசொலியை எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
நீங்கள் போடுகின்ற ஓட்டு மோடிக்கு வைக்கின்ற வேட்டு, அவர் மட்டும் நமக்கு வேட்டு வைத்து கொண்டே இருக்கிறார், நாம் அவருக்கு திரும்ப வைக்க வேண்டாமா. தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்துக்குத்தான் முதல் கையெழுத்தைப் போட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.13.05 கோடி பயணங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இதைப் பார்த்து கர்நாடக மாநிலத்தில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் அரசின் வெற்றி.
இதேபோல, புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 3 லட்சம் கல்லூரி மாணவிகள் மாதம் ரூ. 1,000 பெறுகின்றனர். இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 10,000 மாணவிகள் பயனடைகின்றனர். இந்தியாவிலேயே முதல் முதலாக தமிழகத்தில்தான் காலை உணவுத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதைப் பார்த்து தெலங்கானா, கர்நாடக மாநிலங்களிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தைப் பார்த்து கனடா நாட்டிலும் அந்நாட்டு பிரதமர் அமல்படுத்தியுள்ளார். எனவே, இந்தியா மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் திராவிட மாடல் அரசு முன்மாதிரியாக உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 4.22 லட்சம் பயன்பெற்று வருகின்றனர்.
நம்முடைய தலைவர் மக்களின் அன்பை பெற்று முதல்வர் ஆனவர். மற்றவர் மாதிரி யார் காலையும் பிடித்து முதல்வர் ஆகவில்லை. கொரோனா தொற்று சமயத்தில் மோடி எட்டி கூட பார்க்கவில்லை, இழப்பீடு கொடுக்கவில்லை. ஆறு மாதமாக எதையும் செய்யாத மோடி எல்லோரும் வந்து விளக்கு பிடிங்க என்றார். இதை நான் தப்பாக சொல்லவில்லை, விளக்கு பிடிங்கள், மணி அடிங்கள், கைதட்டுங்கள் கொரோனா தொற்று பயந்து ஓடிவிடும் என சொன்னவர் மோடி.
மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். பாஜகவும், அதிமுகவும் சேர்ந்து தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்துவிட்டன. இவற்றை மீட்டெடுக்க தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இதில், தஞ்சாவூர் தொகுதியில் முரசொலியை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY