ஈரோடு மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் பிரகாஷை ஆதரித்து, தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு சி.பி.ஐ, அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி 75 சதவிகித எதிர்க்கட்சித் தலைவர்கள்மீது வழக்கு பதிவுசெய்துள்ளது.
அதே வேளையில் 44 பா.ஜ.க எம்.பி-க்கள் மேல் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் உள்ளன. பா.ஜ.க எம்.பி மீது பாலியல் புகார் கொடுத்து பல நாள்களாக பெண் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். உலக அரங்கில் நாடே பெரும் தலைகுனிவைச் சந்தித்தது. ஆனால், அந்த எம்.பி மீது பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுத்தார்…
பெண் சக்தி என பேசும் பிரதமர் மோடி மல்யுத்த வீராங்கனைகளுக்கு என்ன மரியாதை கொடுத்தார்… மணிப்பூரில் பெண்கள்மீது அவ்வளவு மோசமான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்தது. உலகம் முழுவதும் சுற்றக்கூடிய மோடி, மணிப்பூர் செல்ல எது தடுக்கிறது. தமிழகத்துக்கு கொடுப்பதாக சொன்ன வெள்ள நிவாரணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. பெரும்பான்யான மக்களையும், கோவில்களையும் பாதுகாப்பதாக பா.ஜ.க-வினர் சொல்கின்றனர். உண்மையில் திராவிட மாடல் ஆட்சியில்தான் கோயில்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. நீ அவல் எடுத்துவா நான் உமி எடுத்து வருகிறேன். ஊதி ஊதி சாப்பிடலாம் என்ற பழமொழிக்கேற்பதான் பா.ஜ.க செயல்பாடு இருக்கிறது.
ஆண்டுக்கணக்கில் வடஇந்தியாவில் விவசாயிகள் அடிப்படை ஆதார விலை வேண்டுமென போராடி வருகின்றனர். ஆனால், அதை மோடி அரசு கண்டுகொள்ளவே இல்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக கூறிய அறிவிப்பு என்ன ஆனது. விவசாயக் கடன்களை ரத்து செய்ய மறுக்கும் மோடி, அவரது ஆட்சியில் மட்டும் கிட்டத்தட்ட 68 ஆயிரம் கோடி ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்துள்ளார். இது யாருக்கான ஆட்சி மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.