மக்களவைத் தேர்தலில், கூட்டணி கட்சிகள் தொகுதிகள் ஒதுக்கியது போக, திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை மற்றும் கடலூர் தொகுதிகளில் பாமகவும் போட்டியிடுகின்றன. அ.ம.மு.க திருச்சி, தேனி தொகுதியில் களம் காண்கிறது. வேலூரில் புதிய நீதி கட்சி, பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சி, சிவகங்கையில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தென்காசியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஈரோடு, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூரில் தமாகாவும் போட்டியிடுகின்றன.
ராமநாதபுரம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில்தான் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில் தென் சென்னை – தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம், வேலூர் – ஏ.சி. சண்முகம், கிருஷ்ணகிரி – சி.நரசிம்மன், நீலகிரி – எல்.முருகன், கோவை – – அண்ணாமலை, பெரம்பலூர் – பாரிவேந்தர், திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மேலும் விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். இந்த பட்டியலில் பெரும்பாலும் விஐபிக்களே இருப்பதால், அவர்களில் யார் தடம் பதிப்பார்கள் என்கிற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “பாஜக வெளியிட்டுள்ள பட்டியலில் பலரும் மக்களிடத்தில் நன்கு அறியப்பட்ட விஐபிக்கள்தான். கோவையில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக திமுக, அதிமுகவில் களம் இறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் சற்று பிரபலம் இல்லாதவர்கள் தான். இருப்பினும் கடந்தமுறை வானதி வெற்றி பெற்றதற்கு வேலுமணியின் பங்கும் உண்டு. தற்போது அதிமுக, பாஜக பிரிந்துள்ளது. அதற்கு அண்ணாமலைதான் காரணம் என்கிற கோபம் அவர்களுக்கு இருக்கிறது. எனவே அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்வதைவிட அண்ணாமலையை தோற்கடிக்க வேண்டும் என வேலை செய்ய வாய்ப்பு இருக்கிறது. இதேபோல் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளதால் திமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என நினைக்கிறது. எனவே அண்ணாமலை சவால் அதிகமாக தான் இருக்கும்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழிசை அரசியலிலேயே இல்லை. மேலும் அந்த தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் கடுமையான போட்டி இருக்கும். தமிழிசைக்கு களம் சாதகமாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.
வினோஜ் பி.செல்வம் நன்கு உழைக்க கூடியவர். மாநில இளைஞரணித் தலைவராகவும் இருக்கிறார். வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இருப்பினும் தயாநிதி மாறனை எதிர்த்து வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகம்தான்.
முருகன் மீண்டும் அவர் ராஜ்யசபா வேட்பாளராக, மத்தியப் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தசூழலில் நீலகிரி (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கு திமுக வேட்பாளர் ராசா மிகவும் பலம் வாய்ந்தவராக இருக்கிறார். எனவே முருகன் தோல்வியடையும் பட்சத்தில் பாஜகவுக்கு பெரும் தலைகுனிவு ஏற்படும்.
பொன்.ராதாகிருஷ்ணன் 2014 தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். ஆனால் 2019-ல் தோல்வி அடைந்திருந்தார். கட்சியில் மிகுந்த அனுபவம் கொண்டவர். இங்கு தி.மு.க கூட்டணியில் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை போட்டியிட்ட விஜய் வசந்துக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் போட்டி பலமாக இருக்கும்.
விருதுநகர் தொகுதி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிட்டிங் எம்பியாக இருக்கும் மாணிக்கம் தாகூருக்கு மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. தேமுதிக சார்பில் விஜய பிரபாகன் போட்டியிடுகிறார். முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY