நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது. டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

கவிதா

இதே வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சிங் சிங்கும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கிறார். இதே டெல்லி மதுபான கொள்கை வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்த பல மாதங்களாக விசாரிக்கப்பட்டுவந்தவர், தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா. அவரை, கடந்த வாரம் அமலாக்கத்துறை கைது செய்தது.

சமீபத்தில் நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க அமலாக்கத்துறை செயல்பாட்டின் வேகமும் தீவிரமடைந்துவருகிறது என சாடுகிறார்கள் எதிர்க்கட்சியினர். இந்த நிலையில், தற்போது ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்டார்.

ஹேமந்த் சோரன்

மும்பையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, ‘அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, சி.பி.ஐ போன்ற அமைப்புகள் இல்லாமல் பிரதமர் மோடியால் ஜெயிக்க முடியாது’ என்றார்.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியது. ஆனால், ஒரு முறைகூட அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘தனக்கு எதிராக கட்டாய நடவடிக்கை எதுவும் அமலாக்கத்துறை எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால், தன்னை கைது செய்யமாட்டோம் என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன்

அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடனே, அமலாக்கத்துறை அதிகாரிகள் வாரட்ன்டுடன் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர் கெஜ்ரிவால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாட்டில் தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினர். கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்

ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பிறகு, முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட மாநிலத்தின் புதிய முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்கவிருந்தார். அதற்கு முன்பாக, ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களை இழுத்து பா.ஜ.க-வின் ஆட்சியை அமைப்பதற்கான முயற்சி நடைபெற்றது.

மோடி

ஆனாலும், பா.ஜ.க-வின் அந்த முயற்சியை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முறியடித்தது. அந்த சம்பவங்களால், ஹேமந்த் சோரனுக்கு மக்கள் மத்தியில் அனுதாப அலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரம், அப்படி அனுதாப அலை எதுவும் ஹேமந்த் சோரனுக்கு ஆதரவாக எழவில்லை என்கிறார் பா.ஜ.க மாநிலத் தலைவரும் முன்னாள் முதல்வருமான பாபுலால் மராண்டி. ஹேமந்த் சோரனுக்கு ஆதரவாக அனுதாப அலை இருக்கிறதா என்பது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிந்துவிடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அதேபோல, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதால், மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவாக அனுதாப அலை கண்டிப்பாக வீசும் என்கிறார்கள் ஆம் ஆத்மி கட்சியினர். ‘அமலாக்கத்துறை சுயேச்சையாகச் செயல்படுகிது என்று பா.ஜ.க-வினர் சொல்லிக்கொண்டாலும், அது ஆட்சியாளர்களுக்கு எடுபிடியாக இருந்து எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கப் பயன்படுகிறது’ என்று குற்றம்சாட்டப்படுகிறது.

மணீஷ் சிசோடியா

டெல்லி, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். இதனிடையே டெல்லியில் பா.ஜ.க ரகசியமாக நடத்திய களஆய்வில், ஆம் ஆத்மி கட்சிக்குத்தான் வெற்றிவாய்ப்பு இருப்பதாக முடிவுகள் வந்ததாகவும், அதனால்தான், அதிரடி நடவடிக்கைகளில் பாஜக இறங்குவதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள் எதிர்க்கட்சியினர். ஆனால் பாஜக தரப்பினரோ, “கடந்த பல மாதங்களாகவே கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. எனினும் அவர் தான் ஆஜராகாமல் இருந்து வந்தார். தற்போது நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சோதனை நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்தே கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் இதில் தேர்தல் கணக்குகள் எதுவும் இல்லை” என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.