சிவகங்கை மாவட்டத்தில் கீழையூர்- தாயமங்கலம், சாலைக்கிராமம் – சருகுணி சாலையைப் பலப்படுத்த ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பிலான பணிக்கு ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில், தகுதியான ஒப்பந்ததாரர்களின் விண்ணப்பத்தை பரிசீலிக்காமல், அமைச்சர் பெரியகருப்பனின் உதவியாளர் இளங்கோவுக்கு விதிகளை மீறி டெண்டர் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள ஒப்பந்ததாரர் கந்தசாமியிடம் பேசியபோது, “நான் 15 ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்த பணி செய்து, அங்கீகரிக்கப்பட்ட முதல் நிலை ஒப்பந்ததாரராக இருந்துவருகிறேன். இந்த நிலையில், சாலைகளை பலப்படுத்துதல் மற்றும் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் கீழையூர்- தாயமங்கலம், சாலைக்கிராமம் – சருகுணி சாலையை பலப்படுத்த ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் அறிவிக்கப்பட்டது.
இந்தப் பணிகளை செய்வதற்கு இயந்திரங்களை சொந்தமாக வைத்திருப்பதற்கான ஆவணங்களோடு, தரக்கட்டுப்பாட்டு பொறியாளரிடம் உரிய சான்றுகளையும் பெற்று பிப்ரவரி 26-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் ஆன்லைன் மூலமாக டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் உரிய ஆவணங்கள், சான்றிதழ்களோடு விண்ணப்பித்த எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால், கடைசி நேரத்தில் சரியான சான்றிதழ்கள் இல்லாமல் விண்ணப்பித்த அமைச்சர் பெரியகருப்பனின் உதவியாளர் இளங்கோவுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது.
இந்த டெண்டரில் நான் உட்பட இன்னும் 3 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தோம். நெடுஞ்சாலைத்துறை விதிகளின்படி அனைத்து சான்றுகளையும் பதிவேற்றி இருந்தோம். ஆனால், இளங்கோவின் நிறுவனத்தை ஆய்வு செய்யாமலேயே, ‘அனைத்தும் சரியாக இருப்பதாக’ கண்காணிப்பு பொறியாளர் சான்றிதழ் வழங்கியுள்ளார். அதாவது, தகுதியான எங்களைப் போன்ற ஒப்பந்ததாரர்களை நிராகரித்துவிட்டு, கடைசி நேரத்தில் விண்ணப்பித்தவருக்கு, அமைச்சரின் ஆள் என்பதால் விதிகளை மீறி டெண்டரை ஒதுக்கியுள்ளார்கள்.
அமைச்சர் பெரியகருப்பனிடம் நீண்டகாலமாக உதவியாளராக இருக்கும் இளங்கோ, காரைக்குடி சுப்பிரமணியபுரம் முகவரியில் தன் மனைவி, மற்றும் உறவினரை பங்குதாரராக சேர்த்து ‘மமதி அன் கோ’ என்ற பெயரில் ஒப்பந்த நிறுவனத்தை தொடங்கி பதிவு செய்துள்ளார். அதோடு ஊராட்சி, நகராட்சிகளில் சில வேலைகளையும் செய்திருக்கிறார்.
முதலில், ஒருவர் ஒப்பந்ததாரராக செயல்பட வேண்டுமென்றால், யூனியனில் 5-ஆம் நிலை ஒப்பந்ததாரராக பதிவு செய்துகொண்டு, பின்னர் படிப்படியாக முதல் நிலை ஒப்பந்ததாரராக பதிவு செய்ய வேண்டும். ஆனால், இளங்கோவை மட்டும் ஒரே ஆண்டில் முதல் நிலை ஒப்பந்ததாரராக உயர்த்தியுள்ளார்கள்.
நெடுஞ்சாலைப் பணிகளை செய்வதற்கான எந்தவொரு இயந்திரங்களோ, கட்டமைப்பு வசதிகளோ இல்லாதவர்கள்தான் அமைச்சர் பெயரை பயன்படுத்தி ஒப்பந்தம் எடுத்து வருகிறார்கள்.
அமைச்சரின் உதவியாளரான இளங்கோ அரசிடம் சம்பளம் பெறுகிறார். எனவே, இந்த டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டர் அறிவித்து முறையாக நடத்த உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுத்தேன். விசாரணையின்போது, டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒப்பந்ததாரரிடம் ‘சாலைப்பணிகளை மேற்கொள்வதற்கான இயந்திரங்கள் சொந்தமாக உள்ளதா? டெண்டருக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் முறையாக பதிவேற்றம் செய்துள்ளீர்களா? இது சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எந்தவொரு கட்டமைப்பும் இல்லாமல், முறையாக தொழில் செய்கிற எங்களைப் போன்றவர்களையும் பாதிக்கின்ற வகையில் செயல்படும் இதுபோன்ற முறைகேடான ஒப்பந்ததாரர்களைக் கட்டுப்படுத்த இந்த வழக்கு உதவும்” என்றார்.
குற்றச்சாட்டுகளுக்கு இளங்கோவிடம் விளக்கம் கேட்டபோது, “ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஏற்கெனவே அதிலிருந்து நான் விலகி விட்டேன். வழக்கு போட்டவர் வேறு கட்சிக்காரர் என்பதால், அரசியல் பரபரப்புக்காக என் மீது வழக்கு போட்டுள்ளார். நான் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை. நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறேன்” என்றார்.
இந்நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘சாலை பணிக்கான ஒப்பந்தத்தில், ஆன்லைன் மூலமாக உரிய ஆவணங்கள் பதிவேற்றங்கள் செய்யப்படவில்லை என்பது தெரிகிறது. இதனால், ஏற்கனவே விடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. புதிய டெண்டரை அறிவிக்கலாம்’ என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY