கேரள மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து காங்கிரஸ் முன்னாள் முதல்வர்களின் பிள்ளைகளான அனில் ஆண்டனி, பத்மஜா வேணுகோபால் ஆகியோர் பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ‘இன்றைய காங்கிரஸ் நிர்வாகிகள் நாளைய பா.ஜ.க-வினர்’ எனக் கிண்டலாகக் கூறியிருந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இந்த நிலையில் பினராயி விஜயனின் சி.பி.எம் கூடாரத்தில் இருந்து தேவிகுளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.ராஜேந்திரன் பா.ஜ.க-வுக்குச் செல்வதாக, தகவல்கள் பரபரத்துக் கிடக்கின்றன. இதையடுத்து `பினராயி விஜயனின் சகாவு பா.ஜ.க-வுக்குத் தாவுகிறார்’ என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், சி.பி.எம் மூத்த நிர்வாகியுமான எஸ்.ராஜேந்திரன் கடந்த சட்டசபைத் தேர்தலில் சி.பி.எம் வேட்பாளரைத் தோற்கடிக்க வேலை செய்ததாக, கட்சியிலிருந்து ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அவருக்கு மீண்டும் கட்சியில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள மாநில பா.ஜ.க பொறுப்பாளரான பிரகாஷ் ஜவடேகரை டெல்லியில் சென்று சந்தித்துள்ளார் எஸ்.ராஜேந்திரன். எனவே அவர் விரைவில் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதே சமயம் பா.ஜ.க-வில் இணையவில்லை என எஸ்.ராஜேந்திரன் மறுப்பு தெரிவித்துளார். இதுபற்றி எஸ்.ராஜேந்திரன் கூறுகையில், “நான் பா.ஜ.க-வுக்குச் செல்வதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை. பிரகாஷ் ஜவடேகருடன் தனிப்பட்ட முறையில் முன்பே எனக்கு நல்ல நட்பு இருந்துவருகிறது. அவர் எனது வீட்டுக்கு வந்திருக்கிறார். தேர்தல் சமயம் என்பதால் நான் அவரைச் சந்தித்தது, மீடியாக்களில் ஒரு சென்சிட்டிவ் செய்தியாக வெளியாகி உள்ளது. அந்த செய்தியில் உண்மை இல்லை” என்றார்.
இது குறித்து பிரகாஷ் ஜவடேகரும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “எஸ்.ராஜேந்திரனைச் சந்தித்தபோது அவர் பா.ஜ.க-வில் சேர்வது குறித்து பேசவில்லை. குடியேற்ற தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். இந்த விஷயத்தில் அதிகம் பேச விரும்பவில்லை” என்றார்.
பிரகாஷ் ஜவடேகரைச் சந்திக்க செல்லும் முன்பு குடும்ப நிகழ்ச்சி சம்பந்தமாக அவரைப் பார்க்கச் செல்வதாக எஸ்.ராஜேந்திரன் சொல்லியிருக்கிறார். அவரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்தவர், இடுக்கியில் ஏலக்காய் விவசாயிகளின் பிரச்னை சம்பந்தமாக பிரகாஷ் ஜவடேகரை நேரில் சந்தித்துப் பேசியதாகத் தெரிவித்திருக்கிறார். பிரகாஷ் ஜவடேகர் மத்திய அமைச்சர் உள்ளிட்ட எந்த பவர்புல் பொறுப்பிலும் இல்லை. அதிகாரம் இல்லாத அவரை எதற்காக போய் பார்க்க வேண்டும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கே.கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால் பா.ஜ.க-வில் இணைவதாக முதலில் செய்திகள் வெளியான சமயத்தில், அவர் அதை மறுத்துவந்தார். அதுபோலத்தான் எஸ்.ராஜேந்திரனும் கூறி வருவதாகவும்… அவர் விரைவில் பா.ஜ.க-வில் ஐக்கியமாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY