வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த முக்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம். இவர், முக்குன்றம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கச் செயலாளராக உள்ளார். இவரின் மனைவி கங்கா, முக்குன்றம் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். இவர்கள் பத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். மாட்டுக்குத் தேவையான தீவன பயிரை வேளாண் இயந்திரம் மூலம் சிறு, சிறுத் துண்டுகளாக நறுக்கி, அரைத்துக் கொடுக்கின்றனர். சம்பவத்தன்று மாலை, வழக்கம்போல ஊராட்சி மன்றத் தலைவர் கங்கா மாடுகளுக்குத் தீவனப் பயிர் வழங்க இயந்திரத்தில் நறுக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, கவனக்குறைவாக இருந்ததால் அவரது வலது கை இயந்திரத்தில் சிக்கிக்கொண்டது. அலறித் துடித்தார். நொடிப் பொழுதில், அவரது கை நசுங்கி ரத்தம் பீறிட்டுக் கொட்டியது. சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு சி.எம்.சி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். சிதைந்துபோன வலது கையின் குறிப்பிட்ட பகுதியை மருத்துவர்கள் அகற்றிவிட்டு, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தால், கங்காவின் குடும்பமே மிகுந்த சோகத்தில் மூழ்கியிருக்கிறது.