Doctor Vikatan: மெனோபாஸ் சமயத்தில் கொத்துக்கொத்தாக முடி உதிரும் என சிலர் சொல்கிறார்களே… அது நிஜமா? ஆது குறித்து விளக்க முடியுமா?
-ஸ்ரீ. மல்லிகா குரு, சென்னை. 600033
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். மெனோபாஸ் காலகட்டத்தில் முடி உதிர்வு என்பது சற்று அதிகமாகத்தான் இருக்கும். அது இயல்பானதுதான்.
மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் முற்றுப்பெறும் காலகட்டத்தில் பெண்களுக்கான ஹார்மோன்களான புரொஜெஸ்ட்ரான் மற்றும் ஈஸ்ட்ரோஜென் இரண்டும் குறையத் தொடங்கும். இந்த ஹார்மோன்கள்தான் கூந்தல் வளர்ச்சி, அதன் அடர்த்தி என பல விஷயங்களுக்கும் உதவுபவை. இவை குறையத் தொடங்கும்போது கூந்தல் மெலிவு பிரச்னையும் ஆரம்பிக்கும்.
மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் முடி உதிர்வுப் பிரச்னை என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். சிலருக்கு வளர்ச்சி குறைந்து, கூந்தல் எலிவால் போல மாறும். சிலருக்கு மண்டைப் பகுதியில் ஆங்காங்கே மண்டை தெரிகிற அளவுக்கு முடி உதிர்வு இருக்கும். மெனோபாஸ் காலத்தில், மண்டைப் பகுதியில் உள்ள முடி மட்டுமன்றி, கைகள், கால்கள், அக்குள் பகுதி, அந்தரங்கப் பகுதியில் உள்ள ரோமங்களும் மெலியத் தொடங்கும்.
மெனோபாஸுக்கான அறிகுறிகளை உணர ஆரம்பித்ததுமே உங்கள் மருத்துவரை அணுகி இது குறித்தும் ஆலோசனை கேளுங்கள். ஊட்டச்சத்துள்ள சரிவிகித உணவுகள், உடற்பயிற்சி, நல்ல உறக்கம் போன்றவற்றின் மூலம்தான் முடி உதிர்வைக் கட்டுப்படுத்த முடியும். தேவைப்பட்டால், மருத்துவர் உங்களுக்கு சப்ளிமென்ட்டுகளையும் பரிந்துரைப்பார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.