‘கார்டு மேல இருக்க 13 நம்பர சொல்லுங்க’, ‘1 லட்சம் பரிசு விழுந்திருக்கு சார்’, ‘மின் கட்டணம் செலுத்தவில்லை, ஜி பே பண்ணுங்க’ என டிஜிட்டல் திருடர்களின் விதவிதமான தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பணம்பறிப்பது போன்ற மோசடிகள் நடக்கின்றன. இந்த மோசடிகளில் பலரும் சிக்கி தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். தினமும் இதுபோன்ற அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் மக்களைத் தொந்தரவு செய்த வண்ணமிருக்கின்றன.
இதைத் தடுப்பதற்காக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் ‘Chaksu’ என்ற புதிய இணையதளத்தைக் கொண்டுவந்துள்ளது. இதை https://sancharsaathi.gov.in/ என்ற இணையதளத்திற்குள் சென்று இந்த இணையதளத்தை அனுகலாம். விரைவில் இதைத் தனி செயலியாகவும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் உங்களுக்கு வரும் பணமோசடிகள், மிரட்டல் தொடர்பான எந்தவொரு சைபர் க்ரைம் புகார்களையும் இந்த இணையதளதிற்கு சென்று தெரிவிக்கலாம். அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இது குறித்து பேசியுள்ள மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இந்த இணையதளம் மக்களின் ஸ்காம் தொல்லைகளுக்குத் தீர்வாக இருக்கும். மோசடிகளில் ஈடுபடுவோரின் எண்ணை இந்த இணையதளத்தில் புகாரளித்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுபோன்ற சைபர் க்ரைமில் ஈடுபட்ட ஒரு கோடிக்கும் மேலான எண்களை ப்ளாக் செய்து நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். அதேபோல மக்களின் எண்ணை கசியவிடுபவரகளின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” என்று பேசியிருக்கிறார்.