சென்னை கொண்டித்தோப்பு சபாபதி 2-வது தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரகுமார் படேல் (45). இவர் கடந்த 28.2.2024-ம் தேதி கொண்டித்தோப்பு வால்டாக்ஸ் ரோட்டிலிருந்து ஷேர் ஆட்டோவில் பயணித்திருக்கிறார். அப்போது அந்த ஆட்டோவில் ஒரு பெண் உட்பட இரண்டு ஆண்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மகேந்திரகுமார் படேலிடம் சகஜமாக பேசியிருக்கிறார்கள். திடீரென அவர்கள் `இந்த ஆட்டோ, நீங்கள் சொல்லும் இடத்துக்குச் செல்லாது’ என்று கூறியிருக்கிறார்கள். அதனால் மகேந்திரகுமார் படேல், பாதி வழியில் ஆட்டோவிலிருந்து கீழே இறங்கியிருக்கிறார். பின்னர் வேறு ஒரு ஆட்டோவுக்காக மகேந்திரகுமார் காத்திருந்தபோதுதான் அவர் பையில் வைத்திருந்த ஐபோன் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

ரமேஷ்

அதனால் அதிர்ச்சியடைந்த மகேந்திரகுமார் படேல், ஏழு கிணறு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். மேலும் மகேந்திரகுமார் படேல், பயணித்த ஆட்டோவின் பதிவு நம்பரை சி.சி.டி.வி கேமரா மூலம் போலீஸார் கண்டறிந்தனர். பின்னர் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் மகேந்திரகுமார் படேலிடம் ஐபோனைத் திருடியது மணலி சாஸ்திரி நகரைச் சேர்ந்த ரமேஷ் (31), அவரின் தம்பி பெருமாள் (24), இவர்களின் கூட்டாளி அமீன் (31), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தினேஷ் (31) ஆகியோர் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைதுசெய்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கைதுசெய்யப்பட்ட ரமேஷ், பெருமாள் ஆகியோர் தங்களின் அம்மாவுடன் ஷேர் ஆட்டோக்களில் ஏழுகிணறு, யானைக்கவுனி, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மணலி உள்ளிட்ட இடங்களில் பயணிகளைப்போல செல்வார்கள். அப்போது ஆட்டோவில் ஏறும் நபர்களிடம் நைசாக பேச்சுக் கொடுப்பார்கள். அப்போது அவர்களின் கவனத்தை திசை திருப்பி செல்போன்கள், பணம் உள்ளிட்டவற்றை ரமேஷ், பெருமாள் திருடிவிடுவார்கள்.

பெருமாள்

பொருள்களைத் திருடியதும் `இந்த ஆட்டோ நீங்கள் சொல்லும் இடத்துக்குச் செல்லாது’ என்று ரமேஷ் அல்லது பெருமாள் சொல்வார். அதைக்கேட்டு அந்த நபரும் ஆட்டோவிலிருந்து அவசர அவசரமாக இறங்கி விடுவார். இதையடுத்து அடுத்த ஸ்டாப்பில் மூன்று பேரும் இறங்கிச் சென்றுவிடுவார்கள். இவர்கள் பொருள்களைத் திருடும்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்போல காட்டிக் கொள்ள மாட்டார்கள். அறிமுகம் இல்லாதவர்கள்போலவே இருப்பார்கள். அம்மா, மகன்கள் என மூன்று பேரும் சேர்ந்து மகேந்திரகுமார் படேலிடம் செல்போனை திருடியதைப்போல, பலரிடம் கைவரிசை காட்டியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இவர்களிடமிருந்து 44 செல்போன்கள், இரண்டு லேப்டாப், பைக், ஒரு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். தலைமறைவாக இருக்கும் ரமேஷின் அம்மாவைத் தேடிவருகிறோம்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.