டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர், தனது விவாகரத்து வழக்கை எதிர்கொண்டுள்ளார். அவர், திருமணத்திற்குப் பிறகு தனது பெயருடன் தன் கணவரின் குடும்பப் பெயரை சேர்த்திருந்தார். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பெண்ணின் விவாகரத்து வழக்கு விசாரணையில் இருக்கும்போது, திருமணத்திற்கு முன்பு இருந்த தனது குடும்பப் பெயரை பயன்படுத்த விரும்பினார். ஆனால், அதற்குக் கணவரின் ஒப்புதல் தேவை என்று சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருமணத்திற்குப் பிறகு பெண்கள் கணவரின் குடும்பப் பெயரை தங்களது பெயருடன் சேர்த்துக்கொள்கின்றனர். அதே சமயம், திருமணமான பெண்கள், திருமணத்துக்கு முந்தைய தங்களது பெயரை மட்டும் பயன்படுத்துவதாக இருந்தால், அதற்குக் கணவரின் தடையில்லா சான்று, அல்லது விவாகரத்துச் சான்று தேவையாக இருக்கிறது.
இது தொடர்பாக, வீடு மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அரசாணை பிறப்பித்து இருந்தது. விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது, விசாரணை முடியும் வரை, பெயர் மாற்றும் மனுக்கள் மீது முடிவு எடுக்கப்படாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த விதிகளை எதிர்த்து, டெல்லியைச் சேர்ந்த அந்தப் பெண் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், ”கணவரின் குடும்பப் பெயரை திருமணமான பெண்கள் தங்களது பெயரில் இருந்து நீக்க வேண்டுமானால், அதற்குக் கணவரின் தடையில்லா சான்று அவசியம் என்ற அரசின் விதிகள், எனது தனியுரிமையை மீறுவதாக இருக்கிறது. பாலின பாகுபாட்டுடன் நடந்து கொள்வது போன்று இருக்கிறது’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், ‘’ஒரு நபரின் பெயர் தேர்வு, அவரது அடையாளம் மற்றும் சுய வெளிப்பாட்டின் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஆனால், இது குறித்த அரசின் அறிவிப்பு பாலின பாகுபட்டை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இம்மனு நீதிபதிகள் மன்மோகன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் எதிர்ப்புத் தெரிவித்துள்ள அரசு அறிவிப்பு தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், சம்பந்தப்பட்ட அரசுத் துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.