தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, மதுரையில் ஆட்டோமொபைல் துறையின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ) தொழில்முனைவோர் சந்திப்பில் கலந்துகொண்டார். இதில், ஆட்டோமொபைல் துறையில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பயன் பெறும் வகையில் டி.வி.எஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள டிஜிட்டல் மொபிலிட்டி தளத்தை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய டி.வி.எஸ் நிறுவனத்தின் சப்ளை செயின் சொலியூஷன்ஸ் தலைவர் தினேஷ், “டி.வி.எஸ் நிறுவனத்தின் சார்பாகவும், எம்.எஸ்.எம்.இ துறை சார்ந்தோர் சார்பாகவும், சில்லறை வியாபாரிகள் சார்பாகவும், கேரேஜ் உரிமையாளர்கள் சார்பாகவும், போக்குவரத்து ஆப்பரேட்டர்கள் சார்பாகவும், தொழில்முனைவோர் சார்பாகவும் பிரதமர் மோடியை வரவேற்கிறேன்.
நீங்கள் இத்தகைய எம்.எஸ்.எம்.இ முன்னெடுப்புக்கு நேரம் ஒதுக்கி, தொழில்முனைவோருக்காகவும், நாட்டின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் வந்திருக்கிறீர்கள். நாட்டின் மக்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை உருவாக்க வேண்டுமென்ற உங்களின் அக்கறையை நாங்கள் பார்க்கிறோம். மக்கள் அனைவர்க்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமென்ற உங்களின் அர்ப்பணிப்பை நாங்கள் மதிக்கிறோம்.
நாட்டை வளப்படுத்தவும், புதிய இந்தியாவின் வாழ்வாதார நிலைகளை மேம்படுத்தவும் முன்வருபவர்களை நீங்கள் எப்போதும் ஊக்குவித்து வருகிறீர்கள். இத்தகைய நல்ல திட்டத்தை டி.வி.எஸ் நிறுவனம் சார்பில் முன்னெடுப்பதில் எங்களுக்குப் பெருமை. மீண்டும் ஒருமுறை பிரதமர் மோடியை, கரங்களைத் தட்டி மதுரைக்கு வரவேற்போம்” என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “இந்தியாவை வல்லரசாக மாற்றுவோம் என்ற லட்சியத்துடன் இருக்கும் பிரதமர் மோடியால், இந்த தேசம் வேகமாக முன்னேற்றத்தைக் கண்டுகொண்டிருக்கிறது. ரயில்வே, ஹைவே, விமான நிலையம் எனப் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்த பிரதமர் மோடி, தற்போது இந்த டி.வி.எஸ் நிகழ்வை தொடங்கி வைத்திருக்கிறார்.
2047-ல் இந்த நாடு உலகிற்கு வழிகாட்டியாக, வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறவேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் பிரதமர் மோடி இயங்கி வருகிறார். தமிழை காத்தப் பெருமை பிரதமர் மோடியை சாரும். புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல், திருக்குறளை 35 மொழிகளில் மொழி பெயர்த்து உலகம் முழுவதும் எடுத்துச் சென்ற பெருமை பிரதமரை சேரும். தமிழ்நாட்டின் வளர்ச்சி, தொழில் வளச்சிக்கான பணிகளை பிரதமர் மோடி முன்னெடுத்திருக்கிறார் அதற்கு நன்றி” என்றார்.
பிரதமர் மோடி பேசுகையில், “உலகளாவிய வாய்ப்புகள் நமது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கதவைத் தட்டுகின்றன. பல நாடுகளில் உருவாகும் கார்கள், நம்முடைய நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பாகங்களைக் கொண்டு தயார் செய்யப்படுகின்றன.” என்றார்.