சேலம், கந்தம்பட்டி பெருமாள் கோயில் பகுதியில் உள்ள முட்புதரில் நேற்று முகம் சிதைக்கப்பட்ட நிலையில், 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் கிடந்தது. இது குறித்து தகவலின் பேரில் சூரமங்கலம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியைத் திணித்து, கழுத்தை அறுத்தும்… முகத்தை சிதைத்தும், கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. சடலமாகக் கிடந்த வாலிபரின் பேன்ட் பாக்கெட்டில், ஆம்பூரிலிருந்து சேலத்திற்கு வந்த ரயில்வே டிக்கெட் இருந்தது.
பின்னர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸார், கொலைசெய்யப்பட்ட வாலிபர் யார்… முன்விரோதம் காரணமாக கொலைசெய்யப்பட்டாரா… அல்லது காதல் விவகாரமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே அன்னதானப்பட்டி போலீஸில் லைன் மேட்டைச் சேர்ந்த சையத் சஃபி என்பவர் தன்னுடைய மகன் முபாரக்கைக் காணவில்லை எனப் புகாரளித்தார். இதையடுத்து அவரிடம் கொலையான வாலிபரின் சடலத்தை போலீஸார் காண்பித்தபோது, அவர் முபாரக் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சேலம் மேடு பகுதியைச் சேர்ந்தவர் முபாரக். இவர் மூணாங்கிரட்டில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
அப்போது உடன் வேலைசெய்த லைன் மேட்டைச் சேர்ந்த அக்பர் அலியின் மகள் சஜினா பானுவுடன், அவருக்குப் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவருக்கும் 10 நாள்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. பின்னர் திருமண உறவில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சஜினா பானு, கணவனைப் பிரிந்து பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அப்போது முபாரக் தன்னுடைய மனைவி, அவருடைய நண்பருடன் சேர்ந்து ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவதாகக் கூறி, சஜினா பானுவை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சஜினா பானுவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முபாரக்கிடம் பேச வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் அவர் செல்லவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் முபாரக், ஆம்பூருக்கு ரயிலில் சென்றுவிட்டு, மீண்டும் சேலத்துக்கு மாலையில் திரும்பி வந்துள்ளார்.
இதையறிந்த சஜினா பானுவின் உறவினர்கள் மூன்று பேர், முபாரக்கை கந்தம்பட்டி ரயில்வே கேட் அருகே சந்தித்துப் பேசி உள்ளனர். அப்போது சஜினா பானுவின் அந்தரங்கப் படத்தை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்தது குறித்து கேட்டு, தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதில், ஆத்திரமடைந்த சஜினா பானுவின் உறவினர்கள், முபாரக்கின் கழுத்தை அறுத்தும், முகத்தைச் சிதைத்தும் கொலைசெய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து முபாரக்கின் மனைவி மற்றும் அவரின் உறவினர்கள் மூன்று பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.