நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. ஒவ்வொரு நிகழ்வுகளிலும் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. கட்சிகளின் வார்த்தைப் போரும் மெல்ல மெல்லத் தொடங்கியிருக்கிறது. ஒடிசா மாநில எல்லையில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் மோடி தன்னை இதரப் பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவைச் சேர்ந்தவர் எனக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார். உண்மையில் அவர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்” எனப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், குஜராத் மாநிலம் நவ்சாரியில் நடந்த பொது நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி,“காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் என் சாதியை எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதை நீங்கள் தொடர்ந்து பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு அதைவிட்டால் வேறு எதுவும் தெரியாது. ஆனால், காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள்.
என்மீது காங்கிரஸார் எவ்வளவு அவதூறுகளை வீசுகிறார்களோ அந்த அளவுக்கு 400 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றும். ஒரு கட்சி வாரிசு அரசியல் பிடியில் சிக்கினால், அவர்களுக்கு தங்கள் குடும்பத்தைத் தவிர வேறு எதுவும் பெரிதாகத் தெரியாது. அவர்களுக்கெல்லாம், உறவினர், ஊழல் ஆகியவையே அரசியலின் இலக்குகளாக மாறும். அதனால் நாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தமாட்டார்கள். ஆனால், என் தலைமையிலான அரசு ஏழைகளுக்காக 4 கோடி கான்கிரீட் வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.