மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நடந்து வரும் கலவரத்துக்கு முக்கிய காரணம் கடந்த ஆண்டு மார்ச் 27 அன்று மணிப்பூர் உயர் நீதிமன்றம், `மெய்தி இன மக்களை, பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பது குறித்து மணிப்பூர் மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டதுதான். அதற்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குக்கி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு மெய்தி இன மக்களின் எதிர்வினை என மணிப்பூர் மார்ச் மாத இறுதி முதல் தற்போது வரை கலவர பூமியாகவே பதற்றத்தில் இருந்து வருகிறது. கலவரத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதற்கிடையில், பழங்குடியின அமைப்புகள், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, கடந்த ஆண்டு மே 17-ம் தேதி, “பழங்குடியினப் பட்டியல், எஸ்.டி பட்டியல்களை மாற்றவோ சேர்க்கவோ நீதிமன்றத்தால் முடியாது. அது மத்திய அரசின் பொறுப்பு” எனக் கூறி, அந்தத் தீர்ப்பை நிறுத்தி வைத்தது.
அதைத் தொடர்ந்து, பழங்குடியின அமைப்புகள் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென மனுத்தாக்கல் செய்திருந்தன. அந்த வழக்கு நேற்று மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி கோல்மேய் கைபுல்ஷில்லுவின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “உச்ச நீதிமன்றத்தின் கருத்தை நானும் ஒப்புக்கொள்கிறேன். 27.03.2023 தேதியில் இந்த நீதிமன்றம் அளித்த அந்தத் தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டியது மட்டுமல்ல,
2000-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வின் தீர்ப்புக்கு எதிரானது. எனவே, அந்த தீர்ப்பில், `மெய்தி சமூக மக்களை பழங்குடியினப் பிரிவில் சேர்ப்பது குறித்து விரைந்து பரிசீலிக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் 17 (iii) பத்திதான் சர்ச்சைக்கும், கலவரத்துக்கும் காரணமானது. அதை ரத்து செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தீர்ப்பளித்திருக்கிறார்.
இந்த தீர்ப்புக் குறித்து தனியார் ஊடக நிறுவனத்திடம் பேசிய பழங்குடியின அமைப்புகளுக்காக வாதாடிய வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ், “27.3.2023-ல் கொடுத்த தீர்ப்புக்கும் இந்த தீர்ப்புக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 17 (iii) என்ற பத்தி மட்டுமே நீக்கப்பட்டிருக்கிறதே தவிர முழு தீர்ப்பும் ரத்து செய்யப்படவில்லை. மெய்தி இனத்தை எஸ்.டி பட்டியலில் சேர்ப்பது குறித்து மத்திய அரசுக்குப் பதிலளிக்க வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டது இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இதனடிப்படையில் பார்த்தால், எங்கள் மேல்முறையீடு இன்னும் சவாலானது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.