தன்னைக் கடித்த பாம்பைப் பிடித்துக் கொண்டு, சிகிச்சைக்காக வந்த விவசாயியால், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

பாம்பு கடித்த இடம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேயம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன். விவசாயியான இவர், தோட்டத்துப் பகுதியில் அமர்ந்திருந்தபோது, இரண்டரை அடி நீளமுள்ள பாம்பு ஒன்று கடித்துள்ளது. ஆனால், பதற்றமடையாமல் அந்த பாம்பைப் பிடித்துச் சாக்குப்பையில் கட்டியவர், அதை எடுத்துக்கொண்டு உசிலம்பட்டி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு வந்தார்.

சாக்குப்பையில் பாம்புடன் வந்த ஜெயராமனைக் கண்ட மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்பு பாம்புக்கடிக்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, கண்காணித்தனர்.

அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்ட பாம்பு

முதலுதவி சிகிச்சை பெற்ற பின்பு, எந்த பதற்றமும் இல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உட்கொண்டார் விவசாயி ஜெயராமன்.

அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் மூலம் வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட, விரைந்து வந்த வனத்துறையினர் ஜெயராமனிடனிருந்து பாம்பைப் பெற்றுக்கொண்டனர்.

விவசாயி ஜெயராமன்

வனத்துறையினரிடம் ஒப்படைக்கும்போது, “பாம்பு விவசாயிகளின் நண்பன், அதை கொல்லக் கூடாது, கடித்தாலும் பதற்றப்படாமல் இருக்க வேண்டும். இதெல்லாம் எனக்கு தெரிந்ததால்தான் பிடித்து வந்தேன். வனப்பகுதியில் விட்டு விடுங்கள்” என்று விவசாயி ஜெயராமன் தெரிவித்ததைப் பார்த்து, மருத்துவமனையில் இருந்தவர்கள் ஆச்சர்யப்பட்டனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.