பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, டெல்லியை முற்றுகையிடும் வகையில் பிப்ரவரி 13 முதல் `டெல்லி சலோ’ போராட்டத்தை நடத்திவருகின்றனர். இதில், சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் குவிந்திருக்கின்றனர். இதனால், டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுக்க எல்லையில் கடுமையான தடுப்புகளுடன் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அதேசமயம், தடுப்புகளைத் தகர்த்து டெல்லிக்குள் நுழைய டிராக்டர்கள், புல்டோசர் ஆகியவற்றுடன் விவசாயிகளும் தயாராக இருக்கின்றனர். போராட்டத்துக்கு முன்னரும், பின்னரும் விவசாய சங்கங்களுடன் மத்திய அமைச்சர்கள் குழு மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததால், கடந்த 18-ம் தேதி நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் பருத்தி, சோளம், துவரை, உளுந்து, மசூர் பருப்பு ஆகியவற்றை 5 ஆண்டுகளுக்குக் கொள்முதல் செய்ய உறுதியளிப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கடுத்த நாள், கிஷான் மஸ்தூர் மோர்ச்சா சங்கத்தின் தலைவர் சர்வான் சிங் பந்தேர், மத்திய அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும், புதன் கிழமையன்று போராட்டத்தை மீண்டும் தொடங்குவதாகவும் அறிவித்தார். இவ்வாறிருக்க, விவசாயிகள் போராட்டம் தொடர்பாகப் பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அதில், `அனைவருக்கும் உரிமைகள் பற்றித் தெரியும். அதேசமயம், அரசியலமைப்பு கடமைகளும் இருக்கின்றன’ என்று கூறிய உயர் நீதிமன்றம், விவசாயிகளின் புல்டோசர் உள்ளிட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்யுமாறு பஞ்சாப் – ஹரியானா காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இருப்பினும், 1200 டிராக்டர்கள், 300 கார்கள், 10 மினி பேருந்துகள் மூலம் டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் தயாராக இருப்பதாகவும், ஷம்பு எல்லையில் மட்டும் சுமார் 14,000 விவசாயிகள் குழுமியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், போக்குவரத்து வழித்தடங்களை மாற்றி டெல்லியைச் சுற்றி எல்லைப்பகுதியில் போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் ஷம்பு எல்லையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய கிஷான் மஸ்தூர் மோர்ச்சா சங்கத்தின் தலைவர் சர்வான் சிங் பந்தேர், “நாங்கள் எங்களால் முடிந்தவரை அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்டோம். ஒவ்வொரு கோரிக்கையும் விவாதிக்கப்பட்டது. இனி மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். 1.5 முதல் 2 லட்சம் கோடி ரூபாய் என்பது பெரிய தொகை அல்ல…
பிரதமர் தாமாக முன் வந்து எங்களது கோரிக்கைகளை ஏற்க வேண்டும். இந்த தடைகளை நீக்கி டெல்லியை நோக்கி நடைபயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். அதேசமயம், எந்தவொரு விவசாயியும், இளைஞர்களும் இதில் முன் செல்லமாட்டார்கள் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். விவசாயிகள் சங்கத் தலைவர்கள் அமைதியாக முன் செல்வார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசு சட்டம் இயற்றினால்தான் இதற்கெல்லாம் முடிவு கட்ட முடியும்” என்று வலியுறுத்தினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY