தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம், கடந்த 2022 ஜனவரி மாதமே முடிந்துபோனது. அப்போதிருந்தே புதிய தலைவரை தேடும் படலம் கட்சியில் தீவிரமாக நடந்துவந்தது. ஒவ்வொரு முறை தலைவர் நியமனம் தொடர்பான விவாதம் டெல்லியில் அனல் கிளப்பும்போதும், “உள்ளாட்சி தேர்தல் வருகிறது… அது முடியும் வரை நானே இருந்து கொள்கிறேன்; கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன… அது முடியும் வரையில் நானே தலைவராக இருக்கிறேன்” என முட்டுக்கட்டை போட்டுவந்தார் அழகிரி. இந்தச் சூழலில்தான், கடந்த மாதம் டெல்லியில் தலைவர் மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சீரியஸாகவே நடந்திருக்கிறது.
நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சீனியர்கள் சிலர், “அழகிரிக்கு மாற்றாக யாரை தலைவராக கொண்டு வருவது என்பதில்தான் ஏகப்பட்ட சிக்கல் தொடக்கத்திலிருந்தே இருந்தது. கட்சியில், பெரும்பாலான சீனியர்களும் தலைவர் பதவிக்கு குறிவைத்தனர். சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரமும் தலைவராக தீவிரமாக முயற்சித்தார். இந்தச் சூழலில்தான், கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மிக நெருக்கமானார் செல்வப்பெருந்தகை.
செல்வப்பெருந்தகைக்கு, சட்டமன்ற கட்சித் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்ட போதே சர்ச்சை வெடித்தது. ‘பாரம்பரிய காங்கிரஸ்காரர்கள் எவ்வளவோ பேர் இருக்கும்போது, அவரை ஏன் சட்டமன்ற கட்சி தலைவராக்க வேண்டும்…’ என தென்மாவட்ட கதர் எம்.எல்.ஏ-க்கள் கடுமையாகவே முட்டி மோதினர். அதைப்பற்றியெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல், தலைவர் பதவிக்கு குறிவைத்து மல்லிகார்ஜுன கார்க்கே மூலமாக காய் நகர்த்தினார் செல்வப்பெருந்தகை. கடந்தமாதம் நடந்த டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில், ‘நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரையில் நானே பதவில் தொடர்கிறேன்’ எனச் சொல்லிப் பார்த்தார் அழகிரி. ஆனால், ‘தலைவர் மாற்றம் உறுதியானது. அது தேர்தலுக்குள் நடக்கும்’ என கண்டிப்புடன் சொல்லி அனுப்பிவிட்டார் மல்லிகார்ஜுன கார்க்கே.
தலைவர் பதவிக்கு, ஜோதிமணி, கார்த்திக் சிதம்பரம், ப்ரின்ஸ், விஜயதரணி என எத்தனையோ பேர் முட்டி மோதிய நிலையில், கார்கேவின் ஆதரவுடன் தலைவர் பதவியைப் பிடித்துவிட்டார் செல்வப்பெருந்தகை. புதிய தமிழகம் கட்சியில் தன் அரசியல் வாழ்க்கை தொடங்கி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பயணித்து, தற்போது காங்கிரஸ் கட்சியில் இருப்பவருக்கு தலைவர் பொறுப்பு கிடைத்திருக்கிறது.
இந்த மாற்றத்தில், அழகிரிக்கும் தி.மு.க-வுக்கும் இடையேயான மனக்கசப்பும் ஒரு காரணம். பொதுவெளியில், ‘நாங்கள் 15 சீட்டுகள் எதிர்பார்க்கிறோம்’ என அழகிரி போட்டுடைத்ததை அறிவாலயம் ரசிக்கவில்லை. டெல்லியில், சொல்ல வேண்டிய இடத்தில் தங்கள் மன வருத்தத்தை சொல்லிவிட்டனர். தலைவர் பொறுப்பு கிடைக்காதவர்கள், செல்வப்பெருந்தகைக்கு தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டதை விரும்பாதவர்கள் என ஒரு பட்டாளமே சத்தியமூர்த்தி பவனுக்குள் இருக்கிறது. அவர்களையெல்லாம் சமாளித்து கட்சி நடத்துவதே சவாலான காரியம்தான்” என்றனர் விரிவாக.
தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட கே.எஸ்.அழகிரி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம். தன் விருப்பத்தையும் டெல்லிக்கு அவர் தெரியப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள் சீனியர் கதர்கள். இதற்கிடையே, சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி, கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான ராஜேஸ்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. “சீனியரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருக்கும்போது, ராஜேஸ்குமாரை ஏன் தலைவராக்க வேண்டும்…”, என இப்போதே முணுமுணுப்புகள் எழத் தொடங்கிவிட்டன. தேர்தல் நெருங்கும் வேளையில், புதிய தலைவர் நியமனமும், சட்டமன்ற கட்சித் தலைவர் மாற்றமும் காங்கிரஸ் கட்சிக்குள் ஒருவித சலசலப்பை உண்டாக்கி இருப்பதை மறுப்பதற்கில்லை.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY