காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், அந்தக் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க-வில் சேரப்போவதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது. கடந்த மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று பெரிதும் நம்பினார் கமல்நாத். ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. அதனால், அடுத்து நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வில் சேர்ந்து மத்திய அமைச்சராகும் மனநிலையில் கமல்நாத் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக கமல்நாத் டெல்லிக்குச் சென்றுள்ளார். அவர் டெல்லியில் இதுவரை உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியில் தனக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி கொடுக்கும்படி கமல்நாத் கேட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் கட்சித் தலைமை அதற்கு மறுத்துவிட்டதாக கமல்நாத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமல்நாத் இதற்காக கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்துப் பேசினார். ஆனால் அவரை ராஜ்ய சபா தேர்தலில் வேட்பாளராக நிறுத்த முடியாது என்று கார்கே திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதைத் தொடர்ந்தே அவர் பா.ஜ.க-வில் சேரப்போவதாகச் செய்தி வெளியானது. கமல்நாத் பா.ஜ.க-வில் சேர இருப்பதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, அவரை காங்கிரஸ் கட்சி இன்னும் தொடர்பு கொள்ளவில்லை.

டெல்லி வந்த கமல்நாத்திடம் இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “அப்படி ஏதாவது செய்தி இருந்தால் சொல்கிறேன்” என்று மட்டும் தெரிவித்தார். இது குறித்து காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, “மத்தியப் பிரதேச முதல்வர் பதவிக்கு சிந்தியாவிற்கு பதில் கமல்நாத்தைத் தேர்வு செய்தோம். ஆனால் அவரது பிடிவாதத்தால் அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக்கவில்லை. அப்படி இருந்தும் மீண்டும் அவருக்கு முதல்வர் பதவிக்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் டெல்லியில் இருந்து அனுப்பப்படும் யாருடனும் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். மாநில பொறுப்பாளர் பதவிக்கு ஜெ.பி.அகர்வால் நியமிக்கப்பட்டார்.

ஆனால் அவரை கமல்நாத் விரும்பாததால், அவர் மாற்றப்பட்டார். பின்னர் ரன்தீப் ஜுர்சிவாலா நியமிக்கப்பட்டார். அப்படி இருந்தும் வேட்பாளர்களை நியமிப்பதிலும், பிரசாரம் செய்வதிலும் கமல்நாத் தன்னிச்சையாக செயல்பட்டார்” என்று தெரிவித்தனர். கமல்நாத் மகன் நகுல்நாத் தனது சோசியல் மீடியா பக்கத்தில் காங்கிரஸ் சின்னத்தை நீக்கிவிட்டு, `ஜெய் ஸ்ரீராம்’ என்று குறிப்பிட்டிருந்தார். எனவேதான் அவர் பா.ஜ.க-வில் சேரப்போவதாகச் செய்தி வெளியானது. ஆனால் இச்செய்தியை திக்விஜய் சிங் மறுத்துள்ளார். “நேரு காலத்தில் இருந்து கட்சியில் இருக்கும் கமல்நாத், எப்படி கட்சியில் இருந்து விலகுவார். அப்படி நடக்க வாய்ப்பு இல்லை” என்றார்.

மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பத்வாரி இது குறித்து கூறுகையில், “1980-ம் ஆண்டு கமல்நாத் முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, அவரை இந்திரா காந்தி தனது மூன்றாவது மகன் என்று குறிப்பிட்டார். ராஜ்ய சபா உறுப்பினர் பதவி கொடுக்கவில்லை என்று கூறப்படுவதில், எந்த வித உண்மையும் இல்லை. தற்போது கட்சியில் ராஜ்ய சபா வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அசோக் சிங்கை கமல்நாத்தான் பரிந்துரைத்தார்” என்றார்.

கமல்நாத்

கமல்நாத் பா.ஜ.க-வில் சேரும்போது, அவருடன் சேர்ந்து 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க-வில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத்தும், ராஜஸ்தானில் அசோக் கெலாட்டிடமும் கட்சிப் பொறுப்பை காங்கிரஸ் விட்டிருந்தது. ஆனால் இருவரும் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதனால் மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டார். ராஜஸ்தானில் சச்சின் பைலட் பா.ஜ.க-வில் சேர முயன்றார். ஆனால் கட்சித் தலைமை தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.