அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தனியார் பிசினஸ் பத்திரிக்கை நிறுவனம் `போர்ப்ஸ் (Forbes)’.
இது ஆண்டுதோறும் உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு உலகம் முழுவதும் பிரபலமானது. இந்நிறுவனம் தற்போது, ’30 அண்டர் 30′ என்ற பெயரில் பல துறைகளைச் சேர்ந்த முப்பது வயதிற்குட்பட்ட முப்பது நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை இளம் வயது சாதனையாளர்களாகத் தேர்வு செய்துள்ளது. இந்தியா உட்பட உலகெங்கிலும் இருக்கும் பல நாடுகளில் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் இந்தியாவில் பொழுதுபோக்குத் துறையில் சிறந்து விளங்கும் முப்பது வயதிற்கு உட்பட்டோர்களாக நடிகை ராஷ்மிகா மந்தனா (27) மற்றும் ராதிகா மதன் (28) இடம்பெற்றுள்ளனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகா, தனது 19 வயதிலேயே ‘Kirik Party’ எனும் கன்னடத் திரைப்படத்தில் அறிமுகமாகி ‘கீதா கோவிந்தம்’, ‘புஷ்பா’, ‘வாரிசு’, ‘அனிமல்’ போன்ற படங்கள் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். தற்போது நேஷனல் க்ரஷ்ஷாக பல மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
டெல்லியைச் சேர்ந்த ராதிகா மதன், நடனப் பயிற்சியாளராகத் தனது கரியரைத் தொடங்கியவர். தனது 18 வயதில் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் மக்களுக்கு அறிமுகமானார். கலர்ஸ் தொலைக்காட்சியில் இந்தியில் வெளியான ‘Meri Aashiqui Tum Se Hi’ தொடர், தமிழில் ‘உறவே உயிரே’ என்று டப் செய்யப்பட்டு இங்கும் பிரபலமானது. தனக்குக் கிடைத்த வரவேற்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இவர் ‘Pataakha’, ‘Kuttey’, ‘Kacchey Limbu’ போன்ற பாலிவுட் திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது தனக்கென தனி ரசிகர்களைக் கொண்டு பாலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இப்பட்டியலில் டாப்பில் இருப்பவர்கள் குறைந்த வயதில் (21), மிகக் குறுகிய காலத்தில் சாதித்த தொழில் முனைவோர்களான ஆதித் பலிச்சா மற்றும் கல்வல்யா வோஹ்ரா. இவர்கள் இருவரும் ‘Zepto’ நிறுவனத்தின் இணை நிறுவனர்கள்.
கோவிட் காலங்களில் மக்கள் கடைகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாத கடுமையான சூழ்நிலை இருந்தது. அந்தச் சமயத்தில் சரியாக மார்க்கெட்டைப் பிடித்து இவர்கள் இணைந்து தொடங்கிய ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ‘Zepto’ குறுகிய காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக மாறி, இன்று உச்சத்தை அடைந்திருக்கிறது. ஆதித் பலிச்சா மற்றும் கல்வல்யா வோஹ்ரா இருவரும் 21 வயதிலேயே மில்லியனர்களாகியுள்ளனர்.