2024 நாடாளுமன்ற தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. யார் யாருடன் கூட்டணி என்பது குறித்து தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட எந்த ஒரு கட்சியும் இதுவரை உறுதியாக இறுதியாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் அந்தந்த கட்சியில் முன்னணியில் உள்ள நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்கு காய் நகர்த்தி வருகின்றனர். வேட்பாளர் லிஸ்டில் தங்கள் பெயர் இடம் பெற வேண்டும் என்ற முனைப்பில் ரேஸில் வேகம் காட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர் பெரிய கோயில்

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் இத்தொகுதியை குறி வைத்து செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. தி.மு.க கூட்டணியில் இடம்பெற உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க தலைமை இந்த முறை மூன்று தொகுதிகளை மாற்றி கொடுக்க முடிவு செய்திருப்பதாக சில தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் திருச்சி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு இல்லை எனவும் கூறப்படுகிறது. அதில் மதிமுக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

திருச்சி கிடைக்காது என்ற பேச்சு நிலவுவதால், டெல்டாவில் எப்படியும் தஞ்சாவூரை பெற்று விட வேண்டும் என காங்கிரஸ் தலைமை முனைப்பு காட்டுவதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் இந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றிப்பெற்று வரும் திமுக-வின் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் போன்ற சீனியர்கள் அத்தனை எளிதாக காங்கிரஸுக்கு தொகுதியை விட்டுக்கொடுக்க விரும்பாததும் தெரிகிறது.

அதே போல் பா.ஜ.க கூட்டணியில் அ.ம.மு.க இடம் பெற இருப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள். அதிமுக, பாஜக கூட்டணியில் இடம் பெறாத பட்சத்தில், அமமுக பாஜக் கூட்டணியில் இருக்கும் என்பது கணக்கு. இதில் தஞ்சாவூர் தொகுதியில் பா.ஜ.க போட்டியிடப் போவதாகவும் சொல்லப்படுகிறது. அ.தி.மு.க-வும் தன்னுடன் கூட்டணி அமைக்கும் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதியை கொடுத்து விட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. கூட்டணி இறுதி செய்யப்பட்ட பிறகு அந்த விவரங்கள் வெளியாகும் என்கிறார்கள் அக்கட்சியினர்.

பூண்டி.வெங்கடேசன்

அந்த வகையில் தஞ்சாவூர் தொகுதியில் பா.ஜ.க, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுவதற்கான வாய்ப்புகள் தென்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பா.ஜ.க-வில் தஞ்சாவூர் தொகுதியில் சீட்டை பிடிப்பதற்கான ரேஸ் கடுமையாக நடக்கின்றன. அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளர் பூண்டி.வெங்கடேசன், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஜெய் சதிஷ் ஆகியோர் தொகுதியை கைப்பற்றுவதற்கான ரேஸில் இடம்பிடித்துள்ளனர்.

இது குறித்து பா.ஜ.க தரப்பில் சிலரிடம் பேசினோம், “கடந்த 11-ம் தேதி தஞ்சாவூரில் தி.மு.க அரசை கண்டித்து அ.ம.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அ.ம.மு.க நிர்வாகிகள் பா.ஜ.க, அ.ம.மு.க கூட்டணி உறுதியானதை சூசகமாக வெளிப்படுத்தினர். மேலும் திருச்சி தொகுதிக்கு அ.ம.மு.கவை சேர்ந்த சில வேட்பாளர்கள் பெயரை சொல்லி இதில் தினகரன் யாரை கைகாட்டினாலும் வெற்றி பெற வைப்போம் என்றனர். ஆனால் தஞ்சாவூர் குறித்து யாரும் பேசவில்லை. இவற்றை கணக்கிட்டால் தஞ்சாவூர் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

கருப்பு.முருகானந்தம்

பா.ஜ.க-வை பொறுத்தவரை கருப்பு.முருகானந்தம், பூண்டி வெங்கடேசன், ஜெய் சதிஷ் ஆகியோர் தான் ரேஸில் உள்ளனர். குறிப்பாக பூண்டி.வெங்கடேசன் சீட்டை பெறுவதற்கு தீவிரமாக மெனக்கெட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட பூண்டி.வெங்கடேசன் சுமார் 49,500 வாக்குகள் பெற்றார். அப்போது அந்த தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போடியிட்ட வழக்கறிஞர் வேலுக்கார்த்திகேயன் சுமார் 34,000 வாக்குகள் பெற்றார். தற்போது அ.ம.மு.க தங்கள் கூடணியில் இடம் பெற வாய்ப்பிருப்பதால் அந்த வாக்குகளையும் சேர்த்து பூண்டி.வெங்கடேசன் அறுவடை செய்யலாம் என கருதுகிறார். இதை தனக்கான ப்ளஸாக பயன்படுத்தி களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார். ஆனால் அதிமுக கூட்டணியில் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

கருப்பு.முருகானந்தம் தஞ்சாவூரில் போட்டியிடுவதை பெரிய அளவில் விரும்பவில்லை என அவரின் ஆதரவாளர்கள் தரப்பில் பேசப்படுகிறது. இராமநாதபுரம் தொகுதியை குறிவைத்து அவர் ஏற்கனவே செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஜெய்சதிஷ் சீட் கிடைத்தால் நிற்கலாம் என்கிற மனநிலையில் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் தன் ரூட் கிளியர் ஆகிவிட்டதாக தொகுதியில் வலம் வந்து கொண்டிருக்கிறார் வெங்கடேசன். சில தினங்களுக்கு முன்பு திங்களூர் சந்திரன் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் பிரச்சாரத்தை தொடங்கி விட்டதாக சொல்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

தாமரை சின்னம் வரையும் பூண்டி.வெங்கடேசன்

சுவர்களில் தாமரை சின்னம் வரைதல், வர்த்தக சங்கத்தை சேர்ந்தவர்களை சந்தித்து பேசுதல், பொது விழாக்களில் கலந்து கொள்தல் என சுழன்று வருகிறார். சமீபத்தில் திருக்காட்டுப்பள்ளி புதுச்சந்திரம், கச்சமங்கலம் உள்ளிட்ட சில ஊராட்சிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க உறுப்பினர்கள் வெங்கடேசன் பா.ஜ.கவில் இணைய வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை பா.ஜ.கவின் தலைமைக்கு தெரியப்படுத்த அவர்களும் ஹேப்பி ஆனார்களாம். டெல்லியின் ஆசி இருப்பதால் கூட்டணியில் தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டால் பூண்டி. வெங்கடேசனுக்குத்தான் சீட் என்பது அவரின் நடவடிக்கையில் தெரிகிறது என்கிறார்கள் உள்விபரம் அறிந்தவர்கள். மேலே குறிப்பிட்டுள்ளது போல் காங்கிரஸ் கட்சியும் தொகுதியை கைப்பற்றி விட்டால் தஞ்சாவூரில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் நேரடியாக மோதுவதற்கான வாய்ப்பு உள்ளது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.