தென்கொரியா சியோலை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முக்கிய கட்டுமான நிறுவனம் `Booyoung’. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் 62 லட்ச ரூபாய் வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்து ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
தென்கொரியாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தில் பணிபுரியும் ஆண், பெண் என இருவரும் இதில் பயனடையலாம். அதன்படி ஒரு குழந்தைக்கு 62,26,106 ரூபாய் (75,000 அமெரிக்க டாலர்கள்) வழங்கப்படுகிறது.
2021-ல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 70 குழந்தைகளைப் பெற்ற ஊழியர்களுக்கு மொத்தம் 5.25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 43,58,27,437 ரூபாய்) வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் தலைவர் லீ ஜூங்-கியூன் கூறுகையில், “குழந்தைகளின் பிறப்பு மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்யும் செயலில் ஈடுபடும் நிறுவனமாக `பூயோங்’ அங்கீகரிக்கப்படும். குழந்தை வளர்ப்பில் நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் ஊழியர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது.
மூன்று குழந்தைகள் பெற்ற ஊழியர்களுக்கு ஒரு சிறப்பு தேர்வு வழங்கப்படுகிறது. அவர்கள் மொத்தமாக 300 மில்லியன் கொரியன் வோன் அல்லது 1,86,78,318 ரூபாயை ரொக்கமாகப் பெறலாம். அரசாங்கம் கட்டடத்துக்கு நிலம் வழங்கினால், வாடகை வீடுகளாகப் பெறவும் அவர்கள் தேர்வு செய்யலாம்’’ என்று தெரிவித்தார்.
தென் கொரியாவின் பிறப்பு விகிதம் 2015-ல் இருந்து குறைந்து வருகிறது. 2022-ல் இந்நாட்டின் கருவுறுதல் விகிதம் 0.78 ஆக இருந்தது. இது உலகிலேயே மிகக் குறைந்த கருவுறுதல் விகிதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2025ல் 0.65 ஆக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கவலையைக் கருத்தில் கொண்ட நிறுவனம் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் உள்ள நிதிச் சுமையைச் சமாளிக்க ஊழியர்களுக்கு பணம் கொடுத்து உதவி வருகிறது.