கடந்த 2022 – ம் ஆண்டு அக்டோபர் மாதம், கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலில் கார் சிலிண்டரை வெடிக்கச் செய்து உயிரிழப்புகளை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டியது அம்பலமானதாக சொல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அடுத்தடுத்து விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, திருச்சி பீமநகர், கூனிபஜாரை சேர்ந்த அஷ்ரப் அலி என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த 3 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதேபோல், திருச்சி கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட அப்துல் குத்தூஸ் என்பவரின் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அஷ்ரப் அலி திருச்சி அல்லிமால் தெருவில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். அவரது சகோதரர் அகமதுஅலி திருச்சி மேல்புலிவார்டு பகுதியில் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அஷ்ரப் அலியின் பாட்டி பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். இதனால், அவரது குடும்பத்தினர் பாகிஸ்தான் சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அஷ்ரப் அலியின் பாட்டி இறந்த பின்னர் பாகிஸ்தானுக்கு யாரும் செல்வதில்லை என கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் அந்த குடும்பத்தினரில் ஒருவர் பாகிஸ்தானுக்குச் சென்று வந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது: நேற்று மாலை வரை நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில், அவரது வீட்டிலிருந்து செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். அதே போல், இ.பி ரோட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அப்துல் ரசூல் என்பவர் வீட்டிற்கு சென்ற போது, ரசூல் இல்லாததால் அங்கு சோதனை நடைபெறவில்லை. கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்புபடுத்தி திருச்சியில் இருவரது வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.