அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் பத்திரமாக நன்கொடைகள் கொடுக்கும் திட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு பா.ஜ.க.வுக்கு நன்கொடைகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது. தங்களுக்குக் கிடைத்த நன்கொடைகள் குறித்து அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனில் அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றன. அதில் கிடைத்த தகவலின்படி 2022-23-ம் ஆண்டு மட்டும் பா.ஜ.க.வுக்கு நன்கொடையாக ரூ.2,120 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. இது தவிர வட்டியாக மட்டும் 237 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. நன்கொடையாகக் கிடைத்த நிதியில் தேர்தல் பத்திரமாக 1,300 கோடி கிடைத்து இருக்கிறது. அதாவது 60 சதவீதம் தேர்தல் பத்திரமாகக் கிடைத்திருக்கிறது.
2021-22ம் ஆண்டில் பா.ஜ.க.வுக்கு 1,917 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை கிடைத்து இருந்தது.
காங்கிரஸ் கட்சி 2022-23ம் ஆண்டில் தேர்தல் பத்திரத்தின் மூலம் 171 கோடி ரூபாய் மட்டுமே நன்கொடையாகப் பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டு 236 கோடி ரூபாயாக இருந்தது.
தெலுங்கு தேசம் கட்சிக்குத் தேர்தல் பத்திரமாக ரூ.34 கோடி கிடைத்திருக்கிறது.
பா.ஜ.க.தனக்குக் கிடைத்த நிதியில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பயன்பாட்டுக்கு 78 கோடி ரூபாயைச் செலவு செய்திருப்பதாகத் தெரிவித்து இருக்கிறது. அதோடு தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ரூ.76 கோடியை பா.ஜ.க.வழங்கி இருக்கிறது.
சமாஜ்வாடி கட்சிக்குக் கடந்த நிதியாண்டில் தேர்தல் பத்திரமாக எதுவும் கிடைக்கவில்லை. முந்தைய ஆண்டில் 3.2 கோடி கிடைத்திருந்தது. மற்ற கட்சிகளுக்கு மிகவும் சொற்ப அளவே நன்கொடைகள் கிடைத்திருக்கிறது. நாட்டில் இப்போது தேசிய கட்சிகளாகக் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.கட்சிகள் மட்டுமே இருக்கிறது.