இந்திய கிரிக்கெட்டின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இந்தியாவுக்காக ஐ.சி.சி கோப்பைகள், சென்னைக்காக ஐ.பி.எல் கோப்பைகள் பலவற்றை வென்று கொடுத்தவர், தலைமைப் பண்பின் இலக்கணமாகவும் திகழ்கிறார்.
அவரது கிரிக்கெட்டை விட அவரது கேப்டன்சிதான் அதிகம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டாலும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தலைமையேற்று ஐ.பி.எல் போட்டிகளில் தொடர்ந்து ஆடிவருகிறார். இந்த வருட ஐ.பி.எல் தொடருக்கும் தன்னைத் தயார்ப்படுத்தி வருகிறார். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தலைமைப் பண்புகள் குறித்து சில விஷயங்களை தோனி பேசியிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “விசுவாசம் என்பது மரியாதையுடன் தொடர்புடையது. ஊழியர்கள் அல்லது வீரர்கள் உங்களை மதிக்காவிட்டால், அந்த விசுவாசத்தைப் பெறுவது கடினம். நாம் என்ன பேசுகிறோம் என்பதைவிட, என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். சில நேரங்களில் நாம் பேசாமல் இருந்தால் கூட, செயல்பாடுகள் மூலம் மரியாதை கிடைக்கும்.
ஒரு தலைவன் மரியாதையைச் சம்பாதிக்க வேண்டும். அது நம் செயல்பாடுகள் மூலம் மட்டுமே கிடைக்கும். அணியில் உள்ள அனைத்து வீரர்களின் வலிமையையும், பிரச்னையையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதனைப் புரிந்துகொண்டு நாம் சரி செய்ய வேண்டும். யாருக்கு என்ன வரும், எப்படிச் செய்யப் போகிறோம் என்பதை முடிவு செய்து அதற்கு ஏற்றவாறு திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டும். ஒரு முறை நீங்கள் விசுவாத்தை பெற்றுவிட்டால் அதற்கான பலன்கள் பின்தொடரும்” என்று தெரிவித்திருக்கிறார்.