மும்பை அருகில் உள்ள உல்லாஸ் நகர் காவல் நிலையத்தில், கடந்த 2-ம் தேதி இரவு பா.ஜ.க எம்.எல்.ஏ கண்பத் கெய்க்வாட் தனது அரசியல் எதிரியும் சிவசேனா தலைவருமான மகேஷ் கெய்க்வாட்டை துப்பாக்கியால் சுட்டார். நிலப் பிரச்னை குறித்து பேச இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்குச் சென்றனர். மகேஷ் கெய்க்வாட்டுடன் சிவசேனா கவுன்சிலர் ராகுல் பாட்டீலும் சென்றார். மூன்று பேரும் இரவு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்திற்கு வெளியில் கூடியிருந்தனர். கூட்டத்தைக் கலைக்க இன்ஸ்பெக்டர் தனது அறையிலிருந்து வெளியில் சென்றபோது, கண்பத் கெய்க்வாட் தனது துப்பாக்கியை எடுத்து மகேஷ் கெய்க்வாட் மற்றும் ராகுல் பாட்டீல்மீது சரமாரியாகச் சுட்டார். இதில் இரண்டு பேரும் படுகாயமடைந்தனர்.
மகேஷ் கெய்க்வாட், கண்பத் கெய்க்வாட் ஆகிய இரண்டு பேரும் கல்யான் கொல்சேவாடியில்தான் வசிக்கின்றனர். அவர்கள் கடந்த 2006-ம் ஆண்டு தனித்தனியாக கேபிள் தொழிலை ஆரம்பித்தனர். அதிலிருந்து இருவருக்கும் இடையே பகைமை இருந்து கொண்டிருக்கிறது. மகேஷ் கெய்க்வாட் கேபிள் நிறுவனம்மீது ரெய்டு நடத்தப்பட்டது. அதோடு மகேஷ் கெய்க்வாட்டின் உணவகத்திலும் ரெய்டு நடந்தது. இந்த இரண்டு ரெய்டுக்கும் கண்பத் கெய்க்வாட்தான் காரணம் என்று மகேஷ் கெய்க்வாட் நம்பினார். இதனால் இருவருக்கும் இடையிலான பகைமை நாளுக்கு நாள் அதிகரித்தது. கண்பத் 2009-ம் ஆண்டு சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு 2019-ம் ஆண்டு பா.ஜ.க-வில் சேர்ந்து மீண்டும் பா.ஜ.க சார்பாகப் போட்டியிட்டார். சிவசேனாவும் பா.ஜ.க-வும் கூட்டணியில் இடம் பெற்றிருந்ததால், ஏக்நாத் ஷிண்டே மகனும் மகேஷ் கெய்க்வாட்டும் சேர்ந்து தனஞ்சே என்பவரை அத்தேர்தலில் கண்பத் கெய்க்வாட்டிற்கு எதிராக சுயேச்சையாக நிறுத்தினர்.
அத்தேர்தலில் மகேஷ் கெய்க்வாட் மற்ற கவுன்சிலர்களையும் ஒன்றிணைத்து கண்பத் கெய்க்வாட்டிற்கு எதிராகச் செயல்பட்டார். அப்படியிருந்தும் கண்பத் கெய்க்வாட் தேர்தலில் வெற்றி பெற்றார். இது இருவரது பகையை மேலும் அதிகரித்தது. 2022-ம் ஆண்டு ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை இரண்டாக பிரித்துக்கொண்டு வெளியில் வந்தபோது, அவருக்கு மகேஷ் கெய்க்வாட் முதல் ஆளாக ஆதரவு கொடுத்தார். இதனால் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேயிக்கும் மகேஷ் கெய்க்வாட்டிற்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. ஷிண்டே முதல்வரானதால் மகேஷ் கெய்க்வாட் செல்வாக்கு அதிகரித்தது. அதன் பிறகு கண்பத் கெய்க்வாட் மேற்கொள்ளும் அனைத்து வேலையிலும் மகேஷ் கெய்க்வாட் தலையிட ஆரம்பித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் ஊழல்வாதிகள் என்று கூறிக்கொண்டனர். பொது நிகழ்ச்சிகள் மற்றும் சோஷியல் மீடியாவில் ஒருவருக்கொருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர்.
அதோடு ஒருவர் செய்த வேலைக்கு மற்றொருவர் உரிமை கோரினர். இதனால் தெருக்களில்கூட இருவரும் பல முறை மோதிக்கொண்டுள்ளனர். போலீஸார் தக்க நேரத்தில் தலையிட்டு மோதலைத் தவிர்த்து வந்தனர். இருவரும் அடிக்கடி கொல்சேவாடி காவல் நிலையத்திற்குப் பல்வேறு பிரச்னைகளுக்காக, தங்களது அடியாட்களுடன் வருவதுண்டு. கொல்சேவாடி காவல் நிலைய மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், “கண்பத் கெய்க்வாட் மற்றும் மகேஷ் கெய்க்வாட் ஆகியோர் எப்போதும் காவல் நிலையத்திற்கு தங்களது ஆதரவாளர்களுடன் வருவது வழக்கம். இருவருக்கும் மோதல் ஏற்படக் கூடாது என்பதற்காக எப்போதும் தனியாகவே அவர்களை அழைப்போம். வழக்கமாக அவர்கள் காவல் நிலையத்திற்கு வந்து புகார் செய்வோம் என்று மிரட்டிவிட்டுச் செல்வது வழக்கம்” என்றார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகேஷ் கெய்க்வாட்டிற்கு அவர் வசிக்கும் கல்யான் பகுதியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இரண்டு பெரிய பகையாளிகள் காவல் நிலையம் வரும்போது ஏன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று உல்லாஸ் நகர மக்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.