கேம்பஸ் அரசியலை மையக்கருத்தாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ள சினிமா எல்.எல்.பி (லைஃப் லைன் ஆஃப் பேச்சிலர்ஸ்). ஏ.எம்.சித்திக் இயக்கியுள்ள இந்த சினிமாவில் சிபி, சல்மான், சஞ்சு ஆகிய மூன்றுபேரும் நண்பர்களாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மூன்று நண்பர்களின் கதையுடன் நகரும் இந்த சினிமாவில் நடிகை சைத்ரா பிரவீன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எல்.எல்.பி சினிமாவின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சைத்ரா பிரவீன் கறுப்பு நெட் சேலையில், ஸ்கின் கலரில் பிளவுஸ் அணிந்து கலந்துகொண்ட அந்த புரமோஷன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், அவரது உடை குறித்து விமர்சித்து கமென்ட்டுகளும் எழுந்தன. பிளவுஸ் அணியாமல் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகவும், வைரல் ஆகுவதற்காக கிளாமராக கலந்துகொண்டதாகவும் கமென்ட்டுகள் பறந்தன. மேலும், ஒருவர், ‘நீங்கள் கோழிக்கோடின் அவமானம்’ என கமென்ட் பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து நடிகை சைத்ரா பிரவீன் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை சைத்ரா பிரவீன் கூறுகையில், “நான் கோழிக்கோட்டைச் சேர்ந்தவள். அதை நான் எங்குவேண்டுமானாலும் பெருமையோடு கூறுவேன். அப்படிப்பட்ட என்னை ‘கோழிக்கோடு மண்ணின் அவமானம்’ என கமென்ட் போட்டதைப் பார்த்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது. அன்று நான் அணிந்திருந்தது என்னுடைய அம்மாவின் சேலையும், பிளவுசும் ஆகும். வைரல் ஆக வேண்டும் என்பதற்காக நான் அப்படி செய்யவில்லை.
அந்த சேலை அணிந்ததற்கு பின்பு நான் என்னுடைய அம்மாவுக்கு வீடியோ கால் செய்து காட்டியிருந்தேன். `கறுப்பு உடையில் நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்!’ என அம்மா கூறினார். ஆத்மபூர்வமான நம்பிக்கையின் அடிப்படையில் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு வீடியோ வெளியான பின்புதான் தான் நான் கவனித்தேன், என்னுடைய புன்னகை நன்றாக இருந்தது.
என்னுடைய ட்ரெஸ்ஸிங்-கில் ஒரு குழப்பமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நான் ஒரு பல் டாக்டர். மாடலிங் மூலமாகத்தான் நடிப்பிற்கு வந்தேன். நடிப்பு உலகத்தில் வருவதற்கு வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மிகவும் கஷ்டப்பட்டு தான் வீட்டில் உள்ளவர்களுக்கு புரிய வைத்தேன். நான் நடிக்கும் சினிமாக்களின் படப்பிடிப்பு செட்டுகளுக்கு வீட்டினரையும் அழைத்துக்கொண்டு போன பின்பு தான் அவர்களுக்கு மனதில் இருந்த சந்தேகங்கள் நீங்கின. அந்த தைரியத்தில் நான் தொடர்ந்து நடித்து வரும்போது தான் இந்த வீடியோ வைரலானது.
அந்த வீடியோவை வீட்டில் உள்ளவர்கள் பார்த்து என்ன சொல்வார்களோ என்று மிகவும் வருத்தப்பட்டேன். ஆசிரியரான எனது அப்பா ஸ்லீவ்லெஸ் ஆடைகள் அணிவதைக் கூட விரும்ப மாட்டார். அப்படிப்பட்ட நிலையில் இந்த வீடியோவைப் பார்த்து என்ன சொல்வார் என்ற பயம் ஏற்பட்டது. ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை. நாம் நல்ல உடை அணிந்தாலும் உற்று பார்க்கும் நபர்களைப்பற்றி என்ன சொல்லமுடியும். சிறு வயது முதலே நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது. நன்றாக டிரஸ் அணிந்து, மேக்கப்புடன் நடிப்பதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும். சேலை எனக்கு மிகவும் பிடித்தமான உடை. சேலை அணியும் போது உடலின் சில பகுதிகள் தெரிகிறது எனச் சொல்வார்கள். அது பெண்களின் அழகு என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் போதுமானதாகும். அதில் தவறு ஒன்றும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை” என்றார்.