நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார், நேரடியாகக் களத்தில் இறங்குவார் என்ற பேச்சுகள் நீண்ட நாள்களாகப் புழங்கிவந்த வந்த நிலையில், `இனி அந்த யூகங்களை நிறுத்திக்கொள்ளுங்கள், களத்தில் இறங்கிவிட்டேன்’ என ஆராவாரம் எதுவும் செய்யாமல், அமைதியாக தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்திருக்கிறார் விஜய். கடந்த சில வாரங்களாகவே, புதிய அரசியல் கட்சியின் பெயர் குறித்து பனையூரில், புஸ்ஸி ஆனந்த் உட்பட மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வந்துகொண்டிருந்தன. கட்சிக்கான பெயர் வந்தது எப்படி என மக்கள் இயக்கம் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்… அப்போது கிடைத்த தகவல்கள்…
அடுத்தடுத்து பனையூரில் நடந்த கூட்டங்களில் மூன்று வார்த்தைகளில் கட்சி பெயர் வைக்கத் திட்டமிட்மிடப்பட்டது. அதிலும், தமிழ்நாடு/தமிழகம், முன்னேற்றம் போன்ற வார்த்தைகளை உள்ளடக்கிய வகையில் பெயர் வைக்கலாம் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதிலும் சிலர், `தளபதி விஜய்’ என்ற பெயரும் அதில் அடங்கும் வகையில் சில பெயர்களை பரிந்துரைத்தனர்.
எனினும், இதற்கு முன்னர் கட்சி ஆரம்பித்தவர்கள், மறைந்த பெரும் தலைவர்களின் பெயரை வைத்தே கட்சிகளை ஆரம்பித்திருப்பதால், நாம் விஜய் பெயரில் ஆரம்பிப்பது சென்டிமென்டாக சரியா வராது என அத்திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது. இப்படியாக மூன்று, நான்கு பரிந்துரைகளைக் கடந்து, கட்சியின் பெயர் மூலமாகவே மக்கள் மத்தியில் ஒரு நேர்மையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இறுதியாக `வெற்றி’ என்ற சொல்லை விஜய் ஓகே செய்திருக்கிறார்.
குறிப்பு: 1984-வில் விஜய் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகிய படத்தின் பெயரும் வெற்றி தான். படத்தின் ஹீரோ விஜயகாந்த். இயக்கம், விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர்.
பின்னர், அரசியல் கட்சி என்றாலே தமிழ்நாடு, தமிழகம், முன்னேற்ற, கட்சி, கழகம் போன்ற முத்திரை குத்தப்பட்ட வார்த்தைகளிலிருந்து தமிழகம், கழகம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து `தமிழக வெற்றி கழகம்’ என்று அதிகாரப்பூர்வமாகத் தனது அரசியல் கட்சியை அறிவித்திருக்கிறார் விஜய். மேலும், கட்சியின் பெயரை அறிவித்த முதல் முழக்கத்திலேயே `2026 சட்டமன்றத் தேர்தலின் வெற்றியே இலக்கு’ என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவராகத் தனது இலக்கை விஜய் அறிவித்திருக்கிறார்.
இப்போதைக்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்பதை உறுதியாகக் கூறிவிட்ட விஜய், சினிமா வாழ்க்கை குறித்து `இதுவரை தான் ஒப்புக்கொண்டிருக்கும் படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியல் பணியில் ஈடுபடுவேன்’ என்று தெளிவுபடுத்திவிட்டார். விரைவில் கட்சிக் கொடி, சின்னத்தையும் அறிவிக்கப்போகிறார்கள். மேலும், மக்கள் இயக்க நிர்வாகிகளாக இருந்த பொறுப்புகளை, கட்சி நிர்வாகிகளாகவும், பொறுப்பாளர்களாகவும் மாற்றும் வேலைகள் தொடங்கியுள்ளார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக மாநாடு எங்கு என்பதும் தீவிர ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மாநாட்டுக்கு முதலில் மதுரையைத் தான் தேர்வு செய்திருந்தார்களாம். இருந்தாலும் வட மாவட்டங்களில் மக்கள் இயக்கத்துக்கு இருக்கும் பலம் காரணமாக சேலம், விழுப்புரத்தை பரிசீலனையில் வைத்திருக்கிறார்களாம். அந்த வகையில், கட்சியின் முதலாவது மாநாடு மதுரை, சேலம், விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் எதாவது ஒன்றில் இருக்கலாம் என்கிறார்கள். அதன்பிறகு, கட்சியின் கொள்கைகள், கொடி, சின்னம் போன்றவற்றை மாநாட்டில் அறிவிக்கும் திட்டமும் இருக்கிறது. இப்போதைக்கு கட்சியின் பெயரை மட்டும் அறிவித்திருப்பதால், விஜய்யின் அரசியல் வருகை களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவருடைய மாநாடும், அதற்குப் பிறகான அவரின் அரசியல் செயல்பாடுகளே வெளிப்படுத்தும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY