அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மருத்துவர் சுதிப்தா மொஹந்தி (33). இவர் பாஸ்டனில் உள்ள பெத் இஸ்ரேல் டீக்கனஸ் மருத்துவ மையத்தின் முதன்மை பராமரிப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த மே 2022-ல் அமெரிக்காவின் ஹோனலுலுவிலிருந்து பாஸ்டனுக்கு ஹவாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தார்.
அப்போது, 14 வயது சிறுமி முன்பு விமானத்தில் சுயஇன்பத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுக்குள்ளானார் சுதிப்தா மொஹந்தி. இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் புகாரளிக்க, போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.
சிறுமி அளித்த வாக்குமூலத்தில், “அந்த நபர் தனது கழுத்து வரை போர்வையால் மூடிக்கொண்டு, தவறான செயலில் ஈடுபட்டார். விமானம் பாஸ்டனில் தரையிறங்கிய பிறகு, என் தாத்தா பாட்டியிடம் நடந்ததைக் கூறினேன். அவர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பான வழக்கு பாஸ்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக நீதிமன்றத்தில் பேசிய மருத்துவர், “நான் எந்த தவறும் செய்யவில்லை. என் வருங்கால மனைவி அந்த விமானத்தில் எனக்கு அருகில் அமர்ந்திருந்தார். அப்படியிருந்தும், இந்தக் குற்றச்சாட்டு ஏன் என்மீது வந்தது என்பது எனக்குப் புரியவில்லை. நான் ஒரு மருத்துவராக மற்றவர்களைக் கவனிப்பதற்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன், மேலும் இந்த தவறான குற்றச்சாட்டுகள் எனக்குக் கடும் மனவேதனையை அளிக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
இறுதியாக மூன்று நாள்கள் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, “இந்திய வம்சாவளி மருத்துவர் குற்றமற்றவர். அவர் விமானத்தில் எந்தவிதமான தவறான செயலிலும் ஈடுபடவில்லை என்பதை தெளிவாகிறது” என நீதிபதி தீர்ப்பளித்தார்.