சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, கடந்த 12-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இந்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “ `வழக்கு ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதா என்பதை விசாரணையில்தான் நிரூபிக்க முடியும்’ என முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது, தவறு. சந்தர்ப்ப சூழ்நிலை மாறவில்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது. ஆனால், ஆவணங்கள் திருத்தப்பட்டதையே, சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றமாகக் கருதுகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜியின் இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், “வழக்கின் புலன் விசாரணை முடிந்துவிட்டது. ஆவணங்கள் அமலாக்கத்துறை வசம் இருக்கின்றன. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருக்கிறார் எனக் கூறி, ஜாமீன் மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “இந்த வழக்கில் 230 நாள்களுக்கு மேல் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வு, அவர் அமைச்சராக நீடிப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்தது.
மேலும், கடை நிலை ஊழியர் ஒருவர், 48 மணி நேரம் சிறையில் இருந்தால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார். ஆனால், 230 நாள்களுக்கு மேல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிக்க அனுமதிப்பதன் மூலம், மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், “கண்டன தீர்மானத்தை (impeachment) எதிர்கொண்ட நீதிபதி, தொடர்ந்து பதவியில் நீடிக்கலாமா… சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என நீதிபதி கூறியதற்கு, பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், “அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர்மீது கண்டன தீர்மானம் வந்தபோது,

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பது குறித்து அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. விருப்பமுள்ளவர்கள் அவர் முன்பு ஆஜராகலாம் என தலைமை நீதிபதி கூறினார். அதனால், தொடர்ந்து நீதிபதியாகவும் அவர் நீடித்தார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. அமைச்சரை நீக்குவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட முடியாது” என்றார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை பிப்ரவரி 14-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.