சண்டிகர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற மேயர் தேர்தலில், இந்தியா கூட்டணியின் ஒருபகுதியாக காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாரைவிட, பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோன்கர் நான்கு வாக்குகள் அதிகமாகப் பெற்று மேயராக வெற்றிபெற்றிருக்கிறார்.
இந்த தேர்தலில், மொத்தம் பதிவான 36 வாக்குகளில், எட்டு வாக்குகளை தேர்தல் தலைமை அதிகாரி செல்லாதவையாக அறிவித்தார். இதனால், 16 வாக்குகள் பெற்றிருந்த பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோன்கர், 12 வாக்குகளைப் பெற்றிருந்த குல்தீப் குமாரை விட நான்கு வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
இருப்பினும், செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட எட்டு வாக்குகளும் இந்தியா கூட்டணிக்கு விழுந்தவையென்றும், பா.ஜ.க தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை செல்லாதவையாக்கி தனது வேட்பாளரை வெற்றிபெற வைத்திருக்கிறது எனவும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டி வருகிறது.
இது குறித்து, வாக்கு படிவங்களில் தேர்தல் தலைமை அதிகாரி கையொப்பமிடும் வீடீயோவை, தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஆம் ஆத்மி, “சண்டிகர் மேயர் தேர்தலில், ஜனநாயகத்தை பா.ஜ.க படுகொலை செய்துவிட்டது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி பெரும்பான்மை பெற்ற பிறகு வெற்றி உறுதியானது. ஆனால், பா.ஜ.க இதில் அயோக்கியத்தனம் செய்து வெற்றி பெற்றதன் மூலம், வெட்கமின்மையின் அனைத்து எல்லைகளையும் அவர்கள் கடந்துவிட்டனர். மேயர் தேர்தலில் தோல்வியடைந்ததற்கே இப்படி செய்கிறார்களென்றால், லோக் சபா தேர்தலில் தோற்றால் என்னென்ன செய்வார்கள்?” என விமர்சித்திருக்கிறது.
மேலும், ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், “சண்டிகர் மேயர் தேர்தலில் பட்டப்பகலில் இவ்வாறு நேர்மையற்ற முறையில் நடந்து கொண்ட விதம் மிகவும் கவலையளிக்கிறது. ஒரு மேயர் தேர்தலிலேயே இவர்கள் (பா.ஜ.க) இவ்வளவு கீழ்த்தரமாக இறங்குகிறார்கள் என்றால், நாட்டின் தேர்தலில் (மக்களவை) எந்த எல்லைக்கும் அவர்களால் செல்ல முடியும்” என்று பா.ஜ.க-வைச் சாடியிருக்கிறார். இன்னொருபக்கம், தேர்தலில் தோல்வியுற்ற குல்தீப் குமார் அங்கேயே உடைந்து அழுதார். குல்தீப் குமார் அழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோவாகப் பரவிவருகின்றன.
இன்னொருபக்கம், மேயராக வெற்றிபெற்ற மனோஜ் சோன்கர், “குற்றம்சாட்டுவதே அவர்களின் (ஆம் ஆத்மி – காங்கிரஸ்) வேலை. தோல்வியை ஜீரணித்துக்கொள்ள முடியாமல், இவ்வாறு குற்றம்சாட்டுகின்றனர். எல்லாமே கேமிராவில் பதிவாகியிருக்கிறது. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. தேர்தலில் வெற்றிபெற்றோம், அவ்வளவுதான்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY