கடந்த அ.தி.மு.க ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். தற்போதும், ஐந்தாவது முறையாகப் பாலக்கோடு தொகுதி எம்.எல்.ஏ-வாக நீடிக்கிறார். அ.தி.மு.க-விலும், அமைப்புச் செயலாளர் – தருமபுரி மாவட்டச் செயலாளர் பதவிகளை வகிக்கிறார். காரிமங்கலம் அருகே கெரகோட அள்ளி கிராமத்தில் இருக்கிற தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் கே.பி.அன்பழகன். அன்பழகனுக்கு சந்திரமோகன், சசிமோகன் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இளைய மகன் சசிமோகனுக்கும், சென்னையைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகள் பூர்ணிமாவுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. வரவேற்பு விழா, சொந்தக் கிராமமான கெரகோட அள்ளியில் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு, மூன்று வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருக்கிறது.
இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி வீட்டின் பூஜை அறையில் ஏற்றப்பட்டிருந்த விளக்கைக் கவனிக்காமல் அருகே சென்றிருக்கிறார் அன்பழகனின் இளைய மருமகள் பூர்ணிமா. பட்டுத் துணியிலான ஆடை அணிந்திருந்ததாகவும், அதனால் எளிதில் தீப்பற்றி மளமளவென பரவியதாகவும் கூறப்படுகிறது. விளையாடிக் கொண்டிருந்த தனது குழந்தைக்கு அருகில் செல்லாமல் இருந்தபடியே தீயை அணைக்க முயன்றிருக்கிறார் பூர்ணிமா. அந்த சமயத்தில், பணிப்பெண் ஒருவரும் வீட்டில் இருந்திருக்கிறார்.
ஒருவழியாக தீயைப் போராடி அணைத்திருக்கிறார்கள். இதில், அவருக்கு 60 சதவிகிதத்துக்கும் அதிகமான தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக மீட்கப்பட்ட பூர்ணிமாவுக்கு, உள்ளூரிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் கொண்டு வந்து அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, கடந்த ஒரு வாரகாலமாக தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார் பூர்ணிமா. கே.பி.அன்பழகனும், அவரின் குடும்பத்தினரும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து, மருமகளின் உடல்நிலையைக் கவனித்துக்கொண்டார்கள்.
முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, கே.சி.வீரமணி, சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உட்பட வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள் பலரும் மருத்துவமனைக்குச் சென்று, பூர்ணிமாவின் உடல்நிலைக் குறித்து கேட்டறிந்தனர். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி பூர்ணிமா இன்று காலை உயிரிழந்தார். அவரின் மரணம் சந்தேகத்துக்குரியது கிடையாது. என்றாலும், திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆவதால் அந்தப் பகுதி வருவாய்க் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தவிருக்கிறார்.
சிகிச்சைப் பெற்றுவந்த நேரத்திலேயே, மாஜிஸ்திரேட் வாக்குமூலமும் பதிவுசெய்யப்பட்டுவிட்டது. இதனிடையே, உயிரிழந்த பூர்ணிமாவின் உடல் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனைச் செய்யப்படுகிறது. அதன்பிறகே, குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட விருக்கிறது. கே.பி.அன்பழகனின் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க-வினர் பலரும் ஆறுதல் கூறிவருகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY