`2030-ம் ஆண்டுக்குள் தொற்றா நோய்களாகிய இதய பாதிப்பு, புற்றுநோய், நீரிழிவு போன்ற பாதிப்புகள் அதிகரிக்கும்’ என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள். முன்கூட்டிச் செய்யப்படும் பரிசோதனைகளின் மூலம் தீவிரமான பல உடல்நல பிரச்னைகளைத் தடுத்துவிடலாம்.
இந்த நிலையில், இலவச புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், `தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வதற்கான திட்டம், பொது சுகாதார துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்டத்தின் தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மக்கள் இலவசமாகப் புற்றுநோய்க்கான பரிசோதனைகளைச் செய்துகொள்ளலாம்.
புற்றுநோயை, ஆரம்பித்திலேயே கண்டறிவதால் உயிரிழப்பைத் தடுக்க முடியும். வாய் புற்றுநோயால் ஆண், பெண் என இரு பாலரும் பாதிக்கப்படுகிறார்கள். மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைகளை 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மேற்கொள்வது அவசியம்.
பரிசோதனை மேற்கொண்டவர்கள் மூன்றாண்டுக்கு ஒருமுறை மறுபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். திட்டத்தின் ஆரம்ப கட்டமாக ராணிப்பேட்டை, ஈரோடு, கன்யாகுமரி, திருப்பத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். சுகாதார பணியாளர்கள் இது குறித்த அறிவிப்பு கடிதத்தை வீடு வீடாக வழங்குவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.