சென்னை மணலி புதுநகர், வெள்ளிவாயல் சாவடி, சிவா நகரைச் சேர்ந்தவர் ராணி. இவர் சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 20-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், “நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். 2016-ம் ஆண்டு குடும்பச் செலவுக்காக காசிமேடு, காசிமா நகர், சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சமையலராக வேலை செய்யும் மதன் என்பவரிடம் 3 லட்சம் ரூபாயை, 5 ரூபாய் வட்டிக்கு வாங்கினேன். கடன் வாங்கியபோது வட்டிப்பணத்துக்காக என்னுடைய ஏ.டி.எம். கார்டை மதன் வாங்கி வைத்துக் கொண்டார். கடன் வாங்கிய நாளிலிருந்து இதுவரை வட்டிப் பணத்தை எடுத்துக் கொண்டு மீதிப் பணத்தை அவர் என்னிடம் கொடுப்பார். தற்போது என்னுடைய ஏ.டி.எம் கார்டு காலாவதியாகிவிட்டது. அதனால் அவரால் வட்டிப்பணத்தை எடுக்க ஏ.டி.எம் கார்டை பயன்படுத்த முடியவில்லை.

ஏடிஎம் கார்டு

அதனால் புதிய ஏ.டி.எம். கார்டை வங்கியிலிருந்து வாங்கித் தரும்படி மதன் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இது தொடர்பாக 18.1.2024-ம் தேதி காசிமேடு தி.மு.க கவுன்சிலர் அலுவலகத்துக்கு வரும்படி கவுன்சிலரின் கணவர் நரேஷ்குமார் போனில் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது மதன், என்னை வழிமறித்து ஏ.டி.எம். கார்டை வாங்கித் தரும்படி தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, என்னை அடிக்கவும் முயன்றார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

அதோடு மதியம் முதல் மாலை 6 மணி வரை கவுன்சிலர் அலுவலக அறையிலேயே அடைத்துவைத்து கொடுமைப்படுத்தினார். அப்போது கவுன்சிலரின் கணவர் நரேஷ்குமார், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். எனவே இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார. அதன்பேரில் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சக்திவேலுக்கு இந்தப் புகார் மனுவை கமிஷனர் அலுவலக அதிகாரிகள் அனுப்பி நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக தி.மு.க கவுன்சிலரின் கணவர் நரேஷ்குமாரிடம் விளக்கம் கேட்க அவரின் செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.