தனி நபர் கடன் மீதான ரிஸ்க் வெயிட்டை (Risk Weight) 100 சதவிகிதத்தில் இருந்து 125 சதவிகிதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. இது தனி நபர் கடன் வாங்குவதில் மேலும் சுமையை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
கடன் வாங்கியே பலர் தங்களது வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்பற்ற கடன்கள் அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு ஆர்பிஐ தனி நபர் கடன் வாங்குவதில் சில விதி மாற்றங்களை செய்துள்ளது.
அதில், ஒரு வங்கி கடன் அளிக்கும்போது அதில் எந்தளவு ரிஸ்க் உள்ளது என்பதை வைத்து, ஒரு குறிப்பிட்ட தொகையை தனியாக பராமரிக்க வேண்டும். இதனை `ரிஸ்க் வெயிட்’ என்று அழைக்கின்றனர்.
ஒரு வங்கி 100 ரூபாய் கடன் வழங்கினால், அது 100% அதாவது ரூ. 100-ஐ கடன் திரும்பி வராமல் போனால் ரிஸ்க்க்கை சமாளிக்க ஒதுக்கி வைக்க வேண்டும். இது 125 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது, முன்பு 100 ரூபாய்க்கு 9 சதவிகித வட்டி விகிதம் எனில் 9 ரூபாயை தனியே வங்கிகள் பராமரிக்க வேண்டும். தற்போது ரிஸ்க் வெயிட்125 சதவிகிதம் அதிகரித்ததை தொடர்ந்து 100 ரூபாய் கடனிற்கு 11.25 ரூபாய் தனியே பராமரிக்க வேண்டும்.
ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் முன்பு இருந்ததை விட கூடுதலாக 2.25 ரூபாய் தனியே பராமரித்து வர வேன்டும்.
இதைப்போல வங்கிகள் கிரெடிட் கார்டுகளுக்கான ரிஸ்க் வெயிட்டை 125 சதவிகிதத்தில் இருந்து 150 சதவிகிதமாக ஆர்.பி.ஐ உயர்த்தி உள்ளது.
இதன்காரணமாக கடன் வழங்கும் வங்கிகள் பலவும் வட்டி விகிதத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடன் வட்டி விகிதங்கள் அதிகமாகும்போது, கடன் வாங்குபவர்களின் தலையில் கூடுதல் சுமை விழும்.
வருகிற பிப்ரவரி மாதம் 29-ம் தேதிக்குள் புதிய விதிகளை பின்பற்றுமாறு அனைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களையும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
கடன் வழங்கும் நிறுவனங்கள் ரிஸ்க்கான கடன்களுக்கு அதிக ரிஸ்க் தொகையை பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி நபர் கடன் மீதான ரிஸ்க் வெயிட் அதிகரிக்கப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.