கரூர் புலியூர் அருகே இருக்கிறது கணேசபுரம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன். டெக்ஸ்டைல்ஸ் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சங்ககிரி. இந்தத் தம்பதியின் இளைய மகன் பாரதி. பத்து வயது நிரம்பிய இவர், கரூரில் உள்ள தனியார் பள்ளியொன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், புலியூரில் இருந்து, தனது தாத்தா, பாட்டி பொன்னுசாமி, செல்லம்மாள் ஆகியோர் வசித்துவரும் வீடான புகலூர் அருகே உள்ள செம்படாபாளையம் செந்தூர் நகர் பகுதியில் உள்ள வீட்டுக்கு பொங்கல் விடுமுறைக்காக சென்றுள்ளார்.
இந்நிலையில், வீட்டின் முன்பு, விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாரதியை, அவரது சித்தப்பா மோகன்ராஜ் (வயது :40) அறிவாளால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் பாரதி, ‘என்னை வெட்டாதீங்க சித்தப்பா’ என்று கெஞ்சியுள்ளார். ஆனால், அதையும் மீறி மோகன்ராஜ் வெட்டியதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சிறுவன் பாரதி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தான். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், வெட்டிக் கொலைசெய்யப்பட்ட பாரதியின் உடலை கைப்பற்றி, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ள அனுப்பிவைத்தனர். அதேபோல், சிறுவனை வெட்டிக் கொலைசெய்த கொலைக் குற்றவாளி மோகன்ராஜை பிடித்த பொதுமக்கள், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸாரின் விசாரணையில், மோகன்ராஜ் ஏற்கெனவே மூன்று வயது சிறுமியைக் கொலைசெய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் விடுதலை பெற்று திரும்பி உள்ளார்.
இதில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், சுற்றித் திரிந்து வந்த மோகன்ராஜ், பொங்கல் விடுமுறைக்கு தனது தாய் வீட்டுக்கு வந்த அண்ணனின் பத்து வயது மகன் பாரதியை எவ்வித காரணம் இன்றி சரமாரியாக அறிவாளால் வெட்டிக் கொலைசெய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதுபற்றி போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர், தனது அண்ணன் மகனை வெட்டிக் கொலைசெய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.