நாட்டின் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் வி.வி.ஐ.பிகள் பிரிவில் கலந்து கொள்வதற்காக கோவை மாவட்டம் வால்பாறை காடர் பழங்குடியினத்தைச் சேர்ந்த தம்பதி ராஜலட்சுமி – ஜெயபால் டெல்லி செல்ல உள்ளனர். தங்களது உரிமைக்காக பழங்குடி மக்களை எல்லாம் ஒன்று திரட்டி தொடர்ந்து, அறவழியில் போராடி நில உரிமை பெற்று தந்தவர் ராஜலட்சுமி.
அவரின் இந்த செயலுக்கு, கணவர் ஜெயபால் பக்கபலமாக இருந்து வழி காட்டியுள்ளார். இதைப் பாராட்டும் விதமாக, இந்தாண்டு குடியரசு தின விழாவில் மிக மிக முக்கியஸ்தர் (VVIP) பிரிவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி இருவரும் விமானம் மூலம் வருகிற 22-ம் தேதி டெல்லி சென்றுவிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, மீண்டும் பிப்ரவரி 2-ம் தேதி தமிழ்நாடு திரும்புகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் காடர் பழங்குடி மக்களின் வீடுகள் சிதைந்துவிட்டன.
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, வனத்தில் வேறு பகுதிக்கு குடியேறிய காடர்களை, வனச்சட்டத்தை காரணம் காட்டி வெளியேற்றியது வனத்துறை. அரசு தேயிலைத் தோட்ட லைன் வீடுகளில் குடியமர்த்தினர். அங்கிருந்து போராட்டத்தை முன்னெடுத்தனர் காடர் மக்கள்.
தொடர்ந்து அறவழிப் போராட்டம், அதிகாரிகளிடம் ஏராளமான மனுக்கள் வழியாக போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தியது ராஜலட்சுமிக்கு, கணவர் ஜெயபால் மற்றும் சமூக ஆர்வலர்கள் துணை நின்றனர். அரசு அசைந்து கொடுக்காவிடினும் வனஉரிமைச் சட்டத்தின் அடிப்படையில், கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி அவர்களாக தங்களது பகுதிக்கு குடியேறினர்.
இதன்மூலம் அரசாங்கமும் அவர்களின் போராட்ட குணத்தைப் பார்த்து, 2021ம் ஆண்டு அவர்கள் சொந்தப் பகுதிக்கே பட்டா வழங்கியது. இந்த மகத்தான போராட்டத்தை முன்னெடுத்து, உரிமைகளை மீட்டவர்களுக்கு அரசு வழங்கியுள்ள இந்த கௌரவம் காடர் பழங்குடி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.