ஐ.டி.சோதனை:
பிரதமர் மோடி தமிழகம் வந்த சமயத்தில் தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். சென்னை அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஐ.டி. சோதனை நடைபெற்றது. அதேபோல, CMK Projects Pvt Ltd என்ற கட்டுமான நிறுவனம் அரசின் பல்வேறு ஒப்பந்தங்களை எடுத்து பணிசெய்து வருகிறது. குழந்தைச்சாமி என்பவருக்குச் சொந்தமான இந்த நிறுவனம், ஈரோட்டைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்துக்குத் தொடர்புடைய அலுலவகம், வீடு எனச் சென்னை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஐ.டி.அதிகாரிகள் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல, கோவையிலும், கிரீன்பீல்ட் என்ற கட்டுமான நிறுவனத்தின் இடங்களிலும், அவரது குடும்பத்தினர் வீடுகளிலும் சோதனை நடத்திவருகிறார்கள். கோவையில் ரியல் வேல்யு லேண்ட் புரோமோட்டர்ஸ் உரிமையாளர்கள் வீட்டிலும் சோதனை நடந்திருக்கிறது.
தொடரும் சோதனை:
நாமக்கல்லில் சத்தியமூர்த்தி அண்ட் கோ என்ற கட்டுமான நிறுவனத்திலும் சோதனை தொடர்ந்திருக்கிறது. இந்த நிறுவனம் தொடர்புடைய சென்னை, நாமக்கல் அலுவலகம், வீடு என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தடதடத்திருக்கின்றன. இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள், டைரி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை ஐ.டி. அதிகாரிகள் எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியானது.
முதல் நாள் சோதனையைத் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கட்டுமான நிறுவனங்களைத் தொடர்புடைய இடங்களில் சோதனை நீண்டுகொண்டே போகிறது. அதில் முக்கியமாக மத்திய, மாநில அரசு ஒப்பந்தப்பணிகளை மேற்கொள்ளும் சி.எம்.கே நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக ஐ.டி. வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த ஐ.டி.சோதனை குறித்து விவரமறிந்த சிலரிடம் பேசினோம், “முதற்கட்டமாக வரி ஏய்ப்பு புகார் தொடர்பாகவே இந்த சோதனை நடைபெறுகிறது. தற்போது ஐ.டி.சோதனை நடைபெறும் இடங்கள் அனைத்துமே கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்கள்தான். இந்த சோதனைக்கும் முன்பு நடைபெற்ற மணல் தொடர்பான சோதனைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. முன்பு மணல் குவாரிகளில் நடந்த சோதனையில் சிக்கிய ஒருசில ஆவணங்கள் சில கட்டுமான நிறுவனங்களின் பெயர்களும் அடிபட்டது கவனிக்கத்தக்கது.
இந்த சோதனையில் மிக முக்கியமாகப் பார்க்கவேண்டிய மற்றொரு விஷயம், சி.எம்.கே கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடத்தில் நீண்டுகொண்டே போகும் சோதனையைத்தான்.
இந்த நிறுவனம் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்திலும் சரி, தற்போது திமுக ஆட்சியிலும் சரி பல்வேறு அரசு ஒப்பந்தங்களை எடுத்து பணிசெய்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தைக் கட்டியதும் இந்த நிறுவனம்தான். மேலும், இந்த நிறுவனம் பல்வேறு துணை நிறுவனங்களை நடத்திவருகிவதாகவும், இந்த நிறுவனம் தனது வருமானத்தைக் குறைத்துக் காட்டியதாகவும் ஐ.டி.துறை அதிகாரிகள் சிலர் சொல்கிறார்கள். சோதனை இன்னும் நீளும் வாய்ப்பு இருக்கிறது. சோதனை நிறைவடைந்த பிறகு கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்த முழு விவரம் தெரியவரும்” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.