அமெரிக்காவில் டியோப்ரா ரெட்டன் என்பவர்மீது மிரட்டல் வழக்கு தொடர்ப்பட்டது. இது தொடர்பான வழக்கு வாஷிங்டனில் உள்ள கிளார்க் கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட டியோப்ரா ரெட்டன், டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை என்பதால், அவரைக் கைதுசெய்ய வாரண்ட் பிறப்பித்தார் நீதிபதி மேரி கே ஹோல்தஸ். இந்த நிலையில், நேற்று அவர் நீதிபதி மேரி கே ஹோல்தஸ் முன்னிலையில் ஆஜரானார்.
விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “டியோப்ரா ரெட்டனை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார். ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு கருத்தை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி மேரி கே ஹோல்தஸ், “அவரது நன்னடத்தையை நான் பாராட்டுகிறேன், ஆனால் அவர் செய்த தவற்றுக்குத் தண்டனை அனுபவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டபோது, திடீரென்று, டியோப்ரா ரெட்டன், தகாத வார்த்தைகளைக் கூறிக்கொண்டு, நீதிபதியை நோக்கிப் பாய்ந்து, நீதிபதியின் பெஞ்ச் மீது குதித்து, அவரைக் கடுமையாகத் தாக்கினார்.
நீதிமன்ற ஊழியர்கள் உடனடியாக நீதிபதியைப் பாதுகாக்க முயன்றும், நீதிபதிக்கு தலையில் காயமேற்பட்டது. நீதிபதி தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கிளார்க் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் ஸ்டீவ் வொல்ப்சன், “நீதிபதிக்கு பெரும் ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பு வழங்கியதற்கு நன்றி. பிரதிவாதியின் வன்முறை நடத்தைக்கு எனது கண்டனம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.