`தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில நிதி ஆதாரங்களும் சுரண்டப்பட்டு சுருட்டப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் நாம் 1 லட்சம் கோடி ரூபாய் வரைக்கும் நிவாரண நிதி கேட்டால் மத்திய அரசு வெறும் 5000 கோடியைத்தான் ஒதுக்கியிருக்கிறது’ என தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தனது தலையங்கத்தில் கடுமையாக விமர்சித்திருக்கிறது. `அப்படியென்றால்… நாங்கள் கொடுக்காத நிதியை நீங்கள் எப்படி கொடுத்து சமாளித்தீர்கள்… கணக்கு காட்டுங்கள்?’ என பா.ஜ.க-வும் கடுமையாக கேள்வி எழுப்பியிருக்கிறது.
தமிழ்நாட்டை கடந்த டிசம்பர் மாதம் உலுக்கியெடுத்த மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத வெள்ளம் ஆகியவை ஏற்படுத்திய பாதிப்பு தொடர்பாக `மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை’ என்ற புகாரை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எழுப்பி வருகிறது. இந்த நிலையில், தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தனது தலையங்கத்தில் `யாருடைய பணம் இது?’ என்ற தலைப்பில் செந்தில்-கவுண்டமணியின் வாழைப்பழக் காமெடியைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருக்கிறது.
`யாருடைய பணம் இது?’ – முரசொலியில் வந்த தலையங்கம்:
“கவுண்டமணி – செந்தில் வாழைப்பழக் காமெடியைப் பார்த்தது தமிழ்நாடு. ‘ஒரு பழம் இங்க இருக்கு… இன்னொரு பழம் எங்க?’ என்று கேட்பார் கவுண்டமணி. ‘அது தான்ணே இது’ என்பார் செந்தில். ஒன்றிய அரசிடம் நிதி கேட்டால், ‘நீங்கள் செலவு செய்யும் பணம் எல்லாம் எங்கள் பணம் தான்’ என்று சொல்கிறார்கள். மாநில அரசுகளிடம் இருந்து பணத்தை வசூலித்து எடுத்துச் செல்லும் ஒன்றிய அரசு, மாநில அரசுக்கு அள்ளியும் தருவது இல்லை, கிள்ளியும் தருவது இல்லை. ஆனால் எள்ளி மட்டும் நகையாடுகிறது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் முதலமைச்சர் அவர்கள் கோரி உள்ளார்கள். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக அளவிடப்படவில்லை. எனவே, அவசர நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் பிரதமரிடம் கோரியுள்ளார்கள். ஆக மொத்தம் 21 ஆயிரத்து 692 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை அவர்கள் தரத் தயாராக இல்லை.
அதற்காக மக்களை காத்திருக்க வைக்க முடியுமா? சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாயை குடும்ப அட்டை அடிப்படையில் தரச் சொல்லி விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதற்கு மட்டும் 1,486 கோடி ரூபாயை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. புயல் மழையால் சாலைகள், பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள், டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், பழுதடைந்த துணை மின் நிலையங்கள் குடிநீர் தொட்டிகள், தெருவிளக்குகள், கிராமச் சாலைகள் ஆகியவற்றை சீர் செய்திட வேண்டும். அதற்கும் நிதி அதிகம் தேவைப்படுகிறது. பொதுமக்களின் இழப்புகளுக்கு நிதி வழங்க வேண்டும். இவை எதையும் மனதில் கொள்ளவில்லை ஒன்றிய அரசு. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் கொடுத்தது, இது மோடி பணம் தான் என்று வஞ்சகப் பொய்யை அவிழ்த்து விடத் தொடங்கிவிட்டார்கள்.
24 லட்சம் பேருக்குக் கொடுங்கள் என்று ரூ.1,486 கோடியை ஒன்றிய அரசு கொடுத்திருந்தால்தான் அது மோடி பணம். தமிழ்நாடு அரசு தனது கருவூலத்தில் இருந்து எடுத்துத் தரும் பணம் எப்படி மோடி பணம் ஆகும்? இது மோசடித் தனம் அல்லவா? நமக்கு முதலில் ரூ.450 கோடியும், பின்னர் ரூ.450 கோடியும் ஒன்றிய அரசு வழங்கி இருக்கிறது. இவை இரண்டும் மிக்ஜாம் புயல் பாதிப்புகளுக்காகத் தரப்பட்ட சிறப்பு நிதி அல்ல. வழக்கமாக பேரிடர் காலங்களில் தருவதற்காக வைத்திருக்கும் நிதியில் இருந்து எடுத்துத் தந்துள்ளார்கள். இவை ஏற்கனவே ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் நிதி தானே தவிர, டிசம்பர் 4,17,18 ஆகிய தேதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காகத் தரப்பட்ட நிதி அல்ல.
2015-ம் ஆண்டு முதல் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய மொத்த தொகை ரூ.1,27,655.80 கோடி. ஒன்றிய அரசால் ரூ.5,884.49 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய தொகையில் 4.61 விழுக்காடு மட்டுமே ஆகும். நாம் கொடுக்கும் பணத்தை கார்பரேட் கம்பெனிகளுக்கு கடன் கொடுத்து. அவர்களுக்கு திவால் நோட்டீஸும் கொடுத்து அழகு பார்ப்பதுதான் பா.ஜ.க-வுக்கு தெரிந்த ஒரே வேலை. இதை தலையாட்டிக் கொண்டு செய்வதற்காகத் தான் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக ஆக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில நிதி ஆதாரங்களும் சுரண்டப்பட்டு சுருட்டப்படுகின்றன என்பது மட்டுமே உண்மை ஆகும். இத்தகைய கார்ப்பரேட் முதலைகள் வேண்டுமானால், ‘இது மோடி பணம்’ என்று சொல்லிக் கொள்ளலாம்.
வாழைப்பழக் காமெடி வந்த படம் ‘கரகாட்டக்காரன்’. இவர்களோ பித்தலாட்டக்காரர்கள்! ” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
`இது மலிவான விஷமப் பிரசாரம்…. கணக்கு காட்ட முடியுமா? – கொந்தளித்த தமிழ்நாடு பா.ஜ.க:
தி.மு.க முரசொலியின் இந்த தலையங்கம் குறித்து தமிழ்நாடு பா.ஜ.க மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியிடம் விளக்கம் கேட்டோம். “தி.மு.கவை பொறுத்தவரை அரசியலும் காமெடியும் ஒன்றுதான். எதை எடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற மனப்பான்மைதான் அவர்களுக்கு. கடந்த 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் அளித்த நிதியை விட மூன்று மடங்கு அதிகமான நிதியை பாரதிய ஜனதா கட்சி ஆட்சி கடந்த 10 வருடங்களில் தமிழ்நாட்டுக்காக ஒதுக்கி இருக்கிறது என பிரதமர் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார். அதேபோல தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய எந்த திட்டமாக இருந்தாலும், குறிப்பாக செல்வமகள் சேமிப்பு திட்டமாக இருந்தாலும் சரி, முத்ரா கடன் வழங்கும் திட்டமாக இருந்தாலும் சரி அதில் தமிழ்நாட்டுக்கான பங்களிப்பு என்பது 10%-மாக இருந்திருக்கிறது என்பதை புள்ளி விவரங்கள் தெளிவாக தெரிவிக்கின்றன. ஒட்டு மொத்த நாட்டிலும் தமிழகத்திற்கு 10% எல்லா திட்டங்களிலும் கிடைத்திருக்கிறது என்பது தமிழகத்தின் மீது பா.ஜ.க அரசு எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருக்கிறது என்பதை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது.
அதேபோல, முதலில் மாநில பேரிடர் நிவாரண நிதி, தேசிய பேரிடர் நிவாரண நிதி என்றால் என்ன என்பதை முதலில் சட்டத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் மொத்தமாகவே மாநில பேரிடர் நிவாரண நிதி என்பது ரூ.400 கோடி என்ற அளவில் தான் இருந்தது. அதை இப்போது 1200 கோடியாக மாற்றி இருக்கிறது பாஜகவின் ஆட்சி. அதேபோல காங்கிரஸ் ஆட்சியில் ஒட்டுமொத்த நாட்டுக்கும் சேர்த்து தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்தது வெறும் ரூ.2000 கோடி தான்! ஆனால் பா.ஜ.க ஆட்சி அமைந்த பிறகு அது ரூ.8000 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த இரண்டு நிதியுமே பேரிடரால் பாதிக்கப்பட்ட உடன் மக்களுக்கு உதவி செய்வதற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி. தவிர, இவை ஒட்டுமொத்தமாக பாதிப்புக்கான நிதியோ, இழப்பீட்டுக்கான நிதியோ அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை நான் பலமுறை சொல்லியும் வேண்டுமென்றே சட்டம் தெரிந்தும் சட்டப்படி இதை செய்ய முடியாது என்று தெரிந்தும் மலிவான அரசியலுக்காக வேண்டுமென்றே இங்கு இருக்கக்கூடிய மாநில அரசுகள் அதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றன.
மத்திய அரசிடம் 1.27 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டதாகவும் ஆனால் வெறும் 5 ஆயிரம் கோடி ரூபாய் தான் மத்திய அரசு தந்ததாகவும் சொல்கிறார்கள். அப்படி உங்களுக்கு நிதி வரவில்லை என்று சொன்னால் மீதமுள்ள 1.22 ஆயிரம் கோடி ரூபாயை மாநில அரசு எப்படி செலவிட்டது? எப்போது செலவிட்டது எங்கே செலவிட்டது என்ற கணக்கை கொடுக்க முடியுமா? அப்படி கொடுக்கவில்லை என்றால் நீங்கள் தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறீர்கள் என்று தான் அர்த்தம்! எந்த ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும் மத்திய அரசு துறை ரீதியாக ஆய்வு செய்து அதற்கான நிதியை அந்தந்த துறை வாயிலாக பட்ஜெட்டில் ஒதுக்கும். இதுதான் சட்டப்படி சாத்தியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவையெல்லாம் சாதாரணமாக பிளஸ்-டுவில் கணக்கு படித்த மாணவர்களுக்கே புரியும். ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்ட ரீதியில் மக்களை குழப்புவதற்காக தொடர்ந்து இது போன்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை தி.மு.க விதைப்பது மிகவும் தவறு!” எனப் பதிலளித்தார்.
இந்த நிலையில், பலவேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக திருச்சி வந்திருக்கும் பிரதமர் மோடியை சந்தித்துப்பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “டிசம்பர் மாதம் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்த மாவட்டங்களின் பொது உட்கட்டமைப்புகள் பெருத்த சேதம் அடைந்திருப்பதோடு, மக்களின் வாழ்வாதாரமும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அவற்றை கடுமையான இயற்கை பேரிடர் என்று அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்துக்கு உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அதே நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த காலங்களை ஒப்பிடும் போது, தற்போதைய மத்திய அரசு 3 மடங்கு அதிக நிதியை வழங்கி உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வரலாறு காணாத நிதியை மத்திய அரசு செலவு செய்திருக்கிறது” என்றார். இதையடுத்து, #வடைவேண்டாம்_நிதிவேண்டும் என்ற ஹேஷ்டேக்கை எக்ஸ் தளத்தில் திமுகவினர் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.