‘மெட்டி ஒலி’, ‘நாதஸ்வரம்’, ‘குலதெய்வம்’ போன்ற வெற்றித் தொடர்களை இயக்கியவர் இயக்குநர் திருமுருகன்.
அவருடைய `திரு’ புரொடக்ஷன் தயாரிப்பில் அடுத்தத் தொடர் எப்போது வர இருக்கிறது என சின்னத்திரை ரசிகர்கள் பலரும் கேட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு அவர்களுடைய புரொடக்ஷன் ஹவுஸில் இருந்து புதியதொரு அறிவிப்பு வரவிருக்கிறது.
இதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருமுருகன் பகிர்ந்திருக்கிறார். திருமுருகன் எம் – மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
`பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடருக்குப் பிறகு சுஜிதா புதிய தொடர் ஒன்றில் கமிட் ஆகியிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பலரும் அடுத்த சீசனிலும் இவர் நடிப்பார் எனக் கூறிவந்த நிலையில் அவர் அந்தத் தொடரில் கமிட் ஆகவில்லை. ஏற்கெனவே `ஜெமினி டிவி’யில் ஒளிபரப்பாகும் கீதாஞ்சலி என்கிற தெலுங்கு தொடரில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது தமிழில் புதியதொரு தொடர் ஒன்றில் கமிட் ஆகியிருக்கிறார் சுஜிதா. இந்தத் தொடர் குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விரைவிலேயே வரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகராக நமக்கு பரிச்சயமானவர் மயில்சாமி. சமீபத்தில் அவருடைய மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் மயில்சாமியின் மகனும், நடிகருமான யுவன் மயில்சாமி புதிய தொடர் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம். அந்தத் தொடர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
முன்னணி சேனல் ஒன்றில் இவர் நடிக்கும் தொடரில் இவருக்கு ஜோடியாக `நம்ம வீட்டு பொண்ணு’ தொடர் நாயகி அஷ்வினி நடிக்க இருக்கிறாராம். சில வருடங்களுக்குப் பிறகு இந்தத் தொடர் மூலம் நடிகை காயத்ரி ஜெயராம் இந்தத் தொடரில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.