வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்representational image
நீரிழிவு உள்ளவர்கள் மட்டும் அல்லாது வெயிட் குறைக்கும் முயற்சியில் உள்ளவர்களும் வீட்டில் இருப்பார்களே. அவர்களுக்குச் சமைப்பதும் ஒரு சாலஞ்சாகத்தான் இருக்கும். சிலருக்கு மாவுச் சத்து புரதம் கொழுப்புச் சத்து போன்றவையை அளவு தீர்மானித்து உணவில் சேர்க்கும் விருப்பம் பழக்கம் அவசியம் ஏதாவது கூட இருக்கும்.
சிலர் முறையான வழி காட்டல் இன்றி தனக்காகத் தோன்றுவதை உணவில் இது வேண்டாம் அது வேண்டாம் என்பார்கள். சமையல் அனுபவம் இல்லாதவர்கள் அவர்களே பார்த்துக் கொள்கிறேன் என்று எல்லா நாளும் ஒரே மாதிரி உணவைச் செய்து சாப்பிட்டு சலிப்புத் தட்டிப் போவார்கள்.
வீடு என்றால் நாலு விதமாகத் தானே இருக்க முடியும்…. வீட்டுக்கு வீடு ஒவ்வொரு மாதிரி… ஆனால் வீட்டில் அனைவருக்கும் சமைக்கும் பொறுப்பை ஏற்பவர்கள் அனைவர் நலனையும் உத்தேசித்து அதற்குத் தகுந்தாற்போல் இந்த உயரிய பணியில் அன்போடு ஈடுபடுகிறார்கள்.. குடும்பத்தினர் அதற்கு உரிய மதிப்பினை அளித்துப் பாராட்ட வேண்டும் என்பதே என் அவா. சரி…. இப்ப நாமே செய்து பார்த்த பனீரில் செய்யும் சில எளிய உணவு முறைகள் பற்றிப் பார்ப்போம்.
முதலிலேயே சொன்னது போல் சுவை வித்தியாசம் ஏற்படுத்தும் மசாலாக்களின் பயன்பாட்டை அறிந்து கொண்டால் போதுமானது. . இது மாதிரி வெரைட்டிகளில் நீங்கள் சுவைக்குச் சேர்க்கும் எண்ணெய் நெய் வெண்ணெய் கிரீம் எதுவானாலும் உங்கள் ஆரோக்கியம் மற்றும் அன்றாட உடல் உழைப்பின் தன்மை கருதியே இருக்கட்டும். காரம் குறைத்துச் சேர்க்கும் மசாலாக்கள் எண்ணெய் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க உதவும்.
சிறிது எண்ணெயில் சீரகம் தாளித்து சுவைக்கு ஏற்றாற்போல் இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் தக்காளி சில பச்சை மிளகாய்த் துண்டுகள் வதக்கி மஞ்சள் தூள் மிளகாய்த் தூள் மல்லித்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சில காய்ந்த வெந்தய இலைகள் சேர்த்து வதக்கி ஈரம் வடித்து உதிர்த்த பனீரைச் சேர்த்து சில நிமிடங்கள் மேலும் அடுப்பில் வைத்து மல்லித் தழை தூவி இறக்கினால் சுவையான பனீர் புர்ஜி ரெடி.
அடுத்து நிறையப் பேருக்கு மிகவும் பிடித்தமான ்பனீர் பட்டர் மசாலாவை கொஞ்சம் நம் செய்முறையில் பார்ப்போம். மென்மையான ஏலக்காய் வாசனையுடன் பிற மணமூட்டிகளும் சேர்ந்தது இந்த ரெசிபி.
ஒரு பிரியாணி இலை நாலைந்து ஏலக்காய் மூணு நாலு கிராம்பு ஒரு சின்ன லவங்கப் பட்டைத் துண்டு இவற்றை சிறிது எண்ணெயில் லேசாக வதக்கி அதில் இஞ்சி பூண்டு விழுது ஒரு வெங்காயம் எனில் அதே சைசில் கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு தக்காளி சேர்த்து வதக்கவும். வேண்டுமெனில் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். இந்த சைட் டிஷ் மென்மையான சுவை கொண்டது என்பதால் உப்பு மிளகாய்த்தூள் காஷ்மீரி மிளகாய்த்தூள் கரம் மசாலா இவை சிறிதளவு சேர்த்து முந்திரிக்கு பதில் ஊற வைத்து தோல் உரித்த பாதாம் பருப்புகள் ஏழெட்டு சேர்த்து வதக்கிய விழுதுடன் மென்மையாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் நம் டயட் பனீர் துண்டுகளைச் சேர்த்து சூடாக்கவும். பனீர் உதிர்ந்திருந்தாலும் பரவாயில்லை.
மசாலாக்கள் எளிதாக உள்ளிறங்கி பனீரின் சுவை கூடும் என்று எடுத்துக் கொள்வோமே.இறுதியாக பிரிட்ஜில் குளிர வைக்கப்பட்ட பாலுடன் அதன் மீது படிந்திருக்கும் பாலேட்டில் சிறிது சேர்த்து அரை கப்பில் இருந்து ஒரு கப் வரை கிரேவி நெகிழும் அளவுக்கு கடைந்து சேர்த்து சூடாக்கி நிறைய மல்லித் தழை தூவி இறக்கிப் பரிமாறவும். இதில் துளி சர்க்கரை சேர்ப்பார்கள். பாலும் அரைத்த பாதாம் பருப்பும் தரும் இனிப்புக்கே நாம் பழகிக் கொள்வோமே. பனீர் பட்டர் மசாலாவில் பட்டர் எங்க என்று கேட்பீர்கள். நாம் நம்ம ஸ்பெஷல் அல்லவா செய்கிறோம்.
அவரவர்க்கு வேண்டும் அளவுக்கு ஒரு பரிமாறும் கிண்ணத்தில் வெண்ணெய் மற்றும் சூடான மசாலா சேர்த்துப் பயன் படுத்திக் கொள்ளவும். மேற் சொன்ன இரண்டு ரெசிபிகளிலும் தந்தபடி மசாலாக்களின் வித்தியாசமே நமக்குச் சுவை வித்தியாசம் தரும் பிரதானம்.இன்னும் எளிதாகப் பயன்படுத்த விரும்பினால் லேசாகத் தாளித்து வதக்கிய பீன்ஸ் அவரை முட்டைகோஸ் காலிஃப்ளவர் போன்ற கறி வகைகளில் இறுதியாகப் பனீரைச் சேர்த்துப் பிரட்டி விடலாம்..
மேலும் சீரகம் தாளித்து அதில் சிறிது நறுக்கின வெங்காயம் தக்காளி உப்பு சாம்பார் பொடி சேர்த்து நன்றாக வதக்கி வெந்து மசித்த கீரை சேர்த்து அதிலேயே பனீரை உதிர்த்து விடலாம். இதில் பூண்டு பேஸ்ட் சேர்ப்பது அவரவர் ஆப்ஷன்.
சிலருக்கு சம்பார் ரசம் கூட்டு போன்ற சமையல் தவிர வாசனை மிகுந்த மசாலாக்கள் அவ்வளவாக பிடிக்காது. அதனால் என்ன..பனீர்த் துண்டுகளை தயிர் உப்பு சிறிதளவு எண்ணெய் சாம்பார் பொடி சிட்டிகை பெருங்காயம் மஞ்சள் தூள் இவற்றைக் கலந்து பிரட்டி ஊற வைத்து தோசைக் கல்லை சிம்மில் வைத்து லேசாக வாட்டிக் கொடுங்கள். அவ்ளோதான். இப்படி உங்கள் சுவைக்குத் தகுந்த மாதிரி பனீரை மேரினேட் செய்து கொள்ளுங்கள். கடுகு எண்ணெய் சிறிது சேர்ப்பது தனி வாசனை தரும். இல்லாட்டியும் கஷ்டம் இல்லை. பொடி செய்த கடுகு துணைக்கு வரும்.
நான் முயற்சிப்பதும் இங்கு சொல்ல வருவதும் என்னவெனில் முழுக் கடலை வகைகள் எனில் சுண்டல் அல்லது குழம்பு அல்லது கூட்டு என்றும் பனீர் எனில் வட இந்திய உணவு வகைகள் மட்டும் எனவும் யோசிக்காமல் மாற்றி யோசிப்போம்.. முயற்சிப்போம் …பிடித்தால் அதைத் தொடர்வோம் என்று தான்… இன்னும் ஊற வைத்த கடலை வகைகளும் பனீரும் கை கோர்த்து ருசிக்கும் ஓரிரு ரெசிபிகளையும் பார்ப்போம். ஊறிய முழுக்கடலைகளில் செய்யக் கூடிய விதம் விதமான உணவு வகைகளை நீங்களும் அறிந்திருப்பீர்கள். நினைவில் கொள்ள வேண்டியது நாம் சேர்க்கும் பொருட்களின் கேலரி அறிந்து சேர்ப்பதுதான். அவற்றில் நான் செய்யும் தால்மக்னி எனக்கு ஒரு சுவாரஸ்ய அனுபவம் தந்தது என்று ஒருமுறை சொல்லியிருந்தேன் என எண்ணுகிறேன்.. அது பற்றியும் சொல்கிறேன்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.