மும்பையின் வான்கடே மைதானத்தில் இந்திய பெண்கள் மற்றும் ஆஸ்திரேலிய பெண்கள் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி பெறும் முதல் வெற்றி இதுதான். அதனால் இந்த வான்கடே டெஸ்ட் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிதான் முதலில் பேட்டிங் செய்திருந்தது. அந்த அணியால் முதல் இன்னிங்ஸில் 219 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அந்த அணியின் சார்பில் தஹ்லியா மெஹ்ராத் மட்டுமே அரைசதம் அடித்திருந்தார். இந்திய அணியின் சார்பில் வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்தராக்கர் 4 விக்கெட்டுகளையும் சுழல்பந்து வீச்சாளர் ஸ்நே ராணா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 406 ரன்களை எடுத்தது. இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர். இதன் மூலம் இந்திய அணி 187 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 261 ரன்களை எடுத்திருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 75 ரன்கள் டார்கெட்டாக நிர்ணயிக்கப்பட்டது. கடைசி நாளான இன்று இந்திய அணி எந்தச் சிரமமுனின்றி 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
கடந்த 10 வருடங்களில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் எந்த அணியிடமும் வீழ்ந்ததே இல்லை. முதல் முறையாக இந்திய அணியிடம் வீழ்ந்திருக்கிறது. இந்திய அணியும் நல்ல ஃபார்மில் இருக்கிறது. கடந்த வாரம்தான் டீ.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அணியின் மிகப்பெரிய வெற்றி இதுதான் எனும் சாதனையையும் செய்தது. ஆஸ்திரேலியாவை முதல் முறையாக வீழ்த்திய இந்திய அணியை கூட்டாக நிற்க வைத்து அந்த வெற்றி தருணத்தை ஆஸ்திரேலிய கேப்டன் அலிஸா ஹீலியே புகைப்படம் எடுத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி சிறப்பாகவே ஆடினாலும் அவர்களுக்கு அவ்வளவாக டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படுவதே இல்லை. இனியாவது அந்த நிலை மாற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.