கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா ஐ.பி.எல் தொடருக்குள் குணமாவாரா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பந்துவீசும்போது ஹர்திக் பாண்ட்யா வழுக்கி விழுந்திருந்தார். அப்போது அவரின் கணுக்காலில் காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக மைதானத்தை விட்டு ஹர்திக் வெளியேறியிருந்தார். அதன்பிறகு அவரால் தொடர்ந்து ஆட முடியவில்லை. உலகக்கோப்பையிலிருந்தும் பாதியிலேயே வெளியேறியிருந்தார். அந்த காயத்திலிருந்து குணமடையாத ஹர்திக் பாண்ட்யா இப்போதும் ஓய்வில்தான் இருக்கிறார். இந்நிலையில், ஜனவரியில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஆடவிருக்கிறது.
உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி ஆடப்போகும் கடைசி டி20 தொடர் இதுதான். இந்தத் தொடருக்குள் ஹர்திக் குணமடைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போதைய நிலவரப்படி ஹர்திக் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆடமாட்டார் என்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
மேலும், காயத்திலிருந்து இன்னும் மீளாததால் ஐ.பி.எல் தொடரிலேயே ஹர்திக் ஆடுவது சந்தேகம்தான் எனும் தகவலும் வெளியாகியிருக்கிறது. ஐ.பி.எல் தொடரில் மும்பை அணி இப்போதுதான் ஹர்திக்கை ட்ரேடிங் முறையில் வாங்கி கேப்டனாக்கியிருக்கிறது. ஆக, அந்த அணிக்கு இந்தச் செய்தி பேரிடியாக இருக்கும். ஆனால், இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. பிசிசிஐ தரப்பிலிருந்து கசிந்த தகவல்களைத்தான் சில வட இந்திய ஊடகங்கள் செய்தியாக்கியிருக்கின்றன.
மேலும், ஹர்திக்கின் காயம் அவ்வளவு தீவிரமாக இருக்கும்பட்சத்தில் 2024 சீசனுக்கே அவரை கேப்டனாக்கும் முடிவை மும்பை எடுத்திருக்கவே செய்யாது. ஹர்திக் அதற்குள் குணமடைந்து முழு உடற்தகுதியுடன் வந்துவிடுவார் எனும் நம்பிக்கை மற்றும் உறுதியின் அடிப்படையில்தான் மும்பை அணி அவரை கேப்டனாக்கியிருக்கும். ஆக, ஹர்திக்கின் ஹெல்த் அப்டேட்டை பற்றி அறிய இன்னும் சில நாட்கள் காத்திருக்கலாம்.