ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. இரண்டு அணிகளுக்குமிடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பான பயிற்சியில் ஆஸ்திரேலிய வீரர் கவாஜா ‘All lives are equal’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட காலணியை அணிந்திருந்தார்.
பாலஸ்தீன கொடியின் நிறத்தில் இது எழுதப்பட்டிருந்ததால் கவாஜா பாலஸ்தீனுக்கு ஆதரவாக செயல்படுகிறார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து கவாஜா இப்போது விளக்கமளித்துள்ளார்.
‘All lives are equal’ என்ற வாசகம் எழுதப்பட்ட காலணியை பயன்படுத்தக்கூடாது என ஐ.சி.சி கூறியது. ஐ.சி.சி யின் கட்டுப்பாட்டினால் கவாஜாவும் போட்டியில் அந்தக் காலணியை அணியவில்லை. ‘இதற்கு முன் பல வீரர்கள் எதை எதையெல்லாமோ எழுதி ஒட்டிக்கொண்டு ஆடியிருக்கின்றனர். அப்போதெல்லாம் ஒன்றுமே சொல்லவில்லை. நான் விதிமுறைகளை மதிக்கிறேன். விதிமுறைப்படியே போராடி அந்த வாசகங்கள் பொருந்திய காலணியை அணிய முயற்சிப்பேன்.’ என கவாஜா முன்னதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த கவாஜா இந்த சர்ச்சை குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். ‘எனக்கு எந்த மறைமுகக் கொள்கையும் கிடையாது. நான் அழுத்தமாக தீவிரமாக நம்பும் ஒரு விஷயத்தின் மீது வெளிச்சம் பாய்ச்ச விரும்பினேன். காலணியில் அந்த வாசகத்தை எழுதும் முன்பு நிறைய யோசித்தேன். நாடு, மதம் என எந்த அடிப்படையிலும் பிரிவினை இருக்கக்கூடாது என நினைத்தேன். நாம் சந்தித்துக் கொண்டிருப்பது மனிதநேய அடிப்படையிலான பிரச்னை.
பல குழந்தைகள் இறப்பதையும் இந்த உலகத்தைவிட்டுச் செல்வதையும் சமூக வலைதளங்களில் வீடியோ மூலம் பார்க்கிறேன். என் மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் என் குழந்தையை அந்த சூழலில் வைத்து பார்க்கிறேன். என்னால் தாங்க முடியவில்லை.
நான் ஒரு அழகான தேசத்தில் வாழ்கிறேன். இங்கே என்னாலும் என் குழந்தையாலும் சுதந்திரமாக நடக்க முடிகிறது. இதே நிலை உலகம் முழுவதும் சாத்தியப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். இதற்காகத்தான் நான் அந்த வாசகத்தை எழுதினேன். ஆனால், என் மீது சமூகவலைதளங்களில் கடும் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். அவர்களின் செயலை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.” என கவாஜா பேசியிருக்கிறார்.