நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்துகள் தெரிவித்ததாக, நடிகர் மன்சூர் அலிகானுக்கு, நடிகை த்ரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்படப் பிரபலங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணைய பரிந்துரைப்படி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோர, நடிகை த்ரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில், எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்குக் களங்கம் கற்பித்ததாகக் குற்றம்சாட்டி, நடிகை த்ரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர அனுமதி கேட்டு, நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நடிகை த்ரிஷா தரப்பில், மூன்று பேருக்கும் எதிராக ஒரே வழக்காக தாக்கல் செய்ய முடியாது என்றும், தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த மன்சூர் அலிகான், குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் என்றும், தனது கருத்து எதிர்ப்பு கருத்துதான் என்றும் வாதிடப்பட்டது.
மன்சூர் அலிகான் தரப்பில், மூன்று பேருக்கு எதிராகவும் ஒரே வழக்காக தாக்கல் செய்ய முடியும் என்றும், மன்சூர் அலிகான் பேசிய வீடியோவை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், “நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மூவரும் எக்ஸ் வலைதளத்தில் தங்கள் கருத்தைப் பதிவுசெய்தனர். இதை அவதூறாக கருத முடியாது. பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது, அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு.
இதே விவகாரத்தில் மன்சூர் அலிகான் மன்னிப்பும் கோரியுள்ளார். உரிமையியல் நடைமுறை சட்டப்படி மூன்று பேருக்கும் எதிராக ஒரே நேரத்தில் வழக்கு தொடர முடியாது. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்கிறேன். இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அவர் செலுத்த வேண்டும்” என மன்சூர் அலிகானுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.