அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புஷ்பா’.
இத்திரைப்படத்தில் கேசவா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி. இவரும் துணை நடிகை ஒருவரும் காதலித்திருக்கின்றனர். அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துவிட்டனர். மீண்டும் அந்த நடிகையுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஜெகதீஷ் பிரதாப் விரும்பியிருக்கிறார். ஆனால் அந்த நடிகை இதனை விரும்பவில்லை.
இந்நிலையில், அந்த நடிகையும், அவருக்குப் பழக்கமான நபரும் தனிமையில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி மிரட்டி இருக்கிறார். இந்நிலையில் அந்த நடிகை கடந்த மாதம் 29 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
அவரின் மறைவிற்கு ஜெகதீஷ் பிரதாப் பண்டாரிதான் காரணம் என்று நடிகையின் தந்தை புகார் அளித்ததன் பேரில் அவரை போலீஸார் சிறையில் அடைத்தனர். தற்போது சிறையில் இருந்த ஜெகதீஷ் பிரதாப் பண்டாரியைப் ‘புஷ்பா’ படக்குழு ஜாமீனில் வெளியே எடுத்திருக்கிறது. ‘புஷ்பா’ 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அல்லு அர்ஜுன் மற்றும் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி ஆகியோர் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிறைக்குச் சென்றுவிட்டதால், படப்பிடிப்பு தாமதமானது.
அவருக்கு பதில் டூப் போட்டு காட்சிகளை எடுத்து விடலாம் என்று படக்குழு திட்டமிட்டிருக்கிறது. ஆனால் அப்படி எடுத்தால் அது ஒட்டுமொத்த படத்தையும் பாதித்து விடும் என்று படப்பிடிப்பிற்காக படக்குழு ரூ.20 லட்சம் ரூபாய் செலவு செய்து ஜாமீனில் எடுத்திருக்கிறது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.