`கே.ஜி.எஃப்’ இரண்டு பாகங்களின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள `சலார்’ திரைப்படம் இந்த வாரம் டிசம்பர் 22-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிறது.
பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘கே.ஜி.எஃப்’ இரண்டு பாகங்களிலும் இடம்பெற்றிருந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் அழுத்தமான ஒன்றாக இருந்தன. ‘சலார்’ படத்திலும் அதேபோன்ற கதாபத்திரங்களை எதிர்பார்க்கலாம் என்று படக்குழு உறுதியளித்து வருகிறது.
இப்படத்தில் நண்பனாகவும், எதிரியாகவும் ‘வரத ராஜா’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பிரித்விராஜ், தன் கதாபாத்திரத்திற்கு தானே தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் டப்பிங் செய்துள்ளார்.
இந்நிலையில் தனது கதாபாத்திரம் குறித்தும் ‘சலார்’ குறித்தும் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள பிரித்விராஜ், “‘வரதா’ கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நிறைய பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்தக் கதாபாத்திரம் திரையில் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய ஏராளமான விஷயங்களை எனக்குச் சொன்னார் இயக்குநர் பிரசாந்த் நீல். கதை நடக்கும் இடத்தின் வரலாறு பற்றியும், ஸ்கிரிப்ட் பற்றியும் நீண்ட நேரம் விரிவாக என்னிடம் விளக்கினார்.
‘சலார்’ ஒரு நல்ல ஆக்ஷன் படமாக இருக்கும். அதேசமயம், என்னதான் ஆக்ஷன் படமாக இருந்தாலும் அதில் எமோஷன் இல்லை என்றால் அது பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தாது. இயக்குநர் பிரசாந்த் நீல், அதில் மாஸ்டர்! எமோஷன் காட்சிகளை எல்லாம் மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். இப்படம் இரண்டு நண்பர்களின் நட்பு, அவர்களின் எமோஷன் பற்றிச் சொல்லும் ஆக்ஷன் படமாகும். எல்லா கதாபாத்திரமும் பிரமாதமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன, எந்தக் கதாபாத்திரத்தையும் உங்களால் தவிர்க்க முடியாது. நிச்சயம் இப்படம் நம் சினிமாவின் ஒரு மைல்கல்லாக அமையும்” என்று உறுதியுடன் கூறியுள்ளார்.