விருதுநகர் அருகே 4 வயது பள்ளி மாணவிக்குப் பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை, போலீஸார் கைதுசெய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர், உறவினர்கள் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். சிறுமி, விருதுநகரில் பிரபல தனியார் பள்ளியில் படிக்கிறார். இந்த நிலையில் வழக்கம்போல பள்ளி முடிந்து சிறுமி வீட்டுக்குத் திரும்பியதும், அவரின் உறவினர்கள் சிறுமியைக் குளிக்க வைப்பதற்காக குளியல் அறைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அப்போது, பிறப்புறுப்பு அருகே சோப்பு போட்டு தேய்க்கையில், சிறுமி வலிப்பதாகச் சொல்லி அழுதிருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், சிறுமியிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். அப்போது, ‘பள்ளியில் தனக்குப் பாடம் சொல்லித் தரும் கணித ஆசிரியர் பெரியசாமி (வயது 52) என்பவர், தன்னுடைய பிறப்புறுப்பில் கைவைத்து அழுத்தியதாக சிறுமி கூறி, அழுதிருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மறுநாள் பள்ளி நிர்வாகத்திடம் சென்று முறையிட்டிருக்கின்றனர். தொடர்ந்து இது குறித்து போலீஸில் புகார் அளித்ததன்பேரில், ஆசிரியர் பெரியசாமியின் மீது வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தப்பட்டது. சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நடந்த சம்பவங்கள் உண்மை எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து, கணித ஆசிரியர் பெரியசாமியை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்” என்றனர்.