பாலிவுட் திரைத்துறையில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் கரண் ஜோஹர். ‘காஃபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தி மிகவும் பிரபலமானவர். பாலிவுட் பிரபலங்கள் பங்குபெற்று மனம் திறந்து பேசுவதுதான் இந்த நிகழ்ச்சி . இந்நிகழ்ச்சியின் 8-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சில் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் கலந்துகொண்ட எபிசோடு சமீபத்தில் வெளியானது. அதில் இந்த ஆண்டு ஏப்ரலில் நீட்டா முகேஷ் அம்பானியின் கலாசார மையத்தின் தொடக்க விழாவில் தனக்கு மனப்பதற்றம் ஏற்பட்டதாக கரண் ஜோஹர் தெரிவித்திருந்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,” கலாசார மைய தொடக்க விழாவில் எனக்கு என்ன நடந்ததென்று நினைவிருக்கிறது. என் முகம் எல்லாம் வியர்த்தது. வியர்ப்பதைக்கூட என்னால் உணரமுடியவில்லை. அங்கிருந்த பாலிவுட் நடிகர் வருண் தவான் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார். என்னிடம் வந்து, “நீங்கள் நலமா?” என்றார்.
என் கைகள் தானாகவே நடுங்க ஆரம்பித்துவிட்டன. அவர் என்னை அங்கிருந்த ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார். எனக்குள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஒருவேளை கார்டியாக் அரெஸ்ட் (மாரடைப்பு) ஆக இருக்குமோ என நினைத்தேன். சற்று நேரம் அங்கு ஓய்வெடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி என் வீட்டுக்கு வந்து அறைக்குச் சென்று அழுதேன். ஏன் அழுதேன் என்றுகூட தெரியவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவரிடம் கேட்டபோது, “மனநலப் பிரச்னைகளைக் குறித்துப் பேசுவது தற்போதைய சூழலில் மிக முக்கியமான ஒன்று. நான் 2016-ம் ஆண்டு முதலே மனப்பதற்றத்தை அனுபவித்து வருகிறேன். இந்த வருடமும் பிரச்னையை எதிர்கொண்டேன். அந்தச் சம்பவத்தைத்தான் நிகழ்ச்சியில் பகிர்ந்தேன்.
எனக்கு நடந்தது போன்று பலருக்கும் நடந்திருக்கலாம். ஆனால் அது பற்றிய தெளிவு அவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்கும். மனப்பதற்றத்தை எதிர்கொண்டவர்கள் எந்தத் தயக்கமும் இன்றி அது பற்றி வெளியே சொன்னால்தான் அதைக் கண்டறிந்து, அதிலிருந்து எப்படி மீள்வது என்ற பக்குவம் பலருக்கும் ஏற்படும்.
நான் இன்னும் மனப்பதற்றம் சார்ந்த பிரச்னையை அனுபவித்துதான் வருகிறேன். மருத்துவர்களின் ஆலோசனையின்படி மருந்து எடுத்துக்கொண்டிருக்கிறேன். இதை வெளியே சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்று கரண் ஜோஹர் தெரிவித்திருக்கிறார்.